அவருக்கு 56 இன்ச் மார்பில்லை.. வெறும் 2 இன்ச்தான்.. மோடியை ஏகபோகமாக கலாய்த்த ராகுல்!
பிரதமர் மோடிக்கு 56 இன்ச் மார்பு கிடையாது, வெறும் 2 இன்ச் மார்புதான் உள்ளது, இது சீனாவிற்கே தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடிக்கு 56 இன்ச் மார்பு கிடையாது, வெறும் 2 இன்ச் மார்புதான் உள்ளது, இது சீனாவிற்கே தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே தற்போது வார்த்தை போர் முற்றி இருக்கிறது. லோக் சபா தேர்தலை முன்னிட்டு இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான வார்த்தை சண்டை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
நேற்று லோக் சபாவில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைத் துறை நடத்திய விழாவில் பேசிய ராகுல் காந்தி, மோடியை மிக கடுமையாக விமர்சித்தார்.
கைகட்டி நின்றார்
ராகுல் காந்தி தனது பேச்சில், டோக்லாமில் 2017ல் சீனா தனது படைகளை குவித்தது. ஆனால் பிரதமர் மோடி எந்த விதமான திட்டமும் இல்லாமல் சீனா சென்றார். சீனாவில் அவர் என்ன செய்தார் தெரியுமா. சீனாவில் அவர் அந்நாட்டு அரசு முன் கைகட்டி நின்றார். ராணுவ குவிப்பு குறித்து அவர் எதுவும் பேசவில்லை.
எல்லோருக்கும் தெரிந்துவிட்டது
அப்போதே சீனா ராணுவத்திற்கு மோடியை பற்றி தெரிந்துவிட்டது. அதில் இருந்து சீனா இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பிரதமர் மோடிக்கு 56 இன்ச் மார்பு உள்ளது என்று பாஜகவினர் பேசுகிறார்கள். ஆனால் மோடிக்கு 56 இன்ச் மார்பு கிடையாது, வெறும் 2 இன்ச் மார்புதான் உள்ளது, இது சீனாவிற்கே தெரியும்.
மோகன் பாகவத்
மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் கைப்பாவையாக செயல்படுகிறார். ஆட்சிதான் பெயருக்கு நடக்கிறது. உண்மையாக ரிமோட் கட்டுப்பாடு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கையில் உள்ளது. டெல்லியை நாக்பூரில் இருந்து ஆர்எஸ்எஸ்தான் இயக்கிக் கொண்டு இருக்கிறது.
எங்கே சென்றது
ஆர்எஸ்எஸ் அமைப்பில் உள்ளவர்கள் தற்போது அரசின் அனைத்து அமைப்பிலும் இருக்கிறார்கள். அனைத்து அரசு இடங்களையும் அவர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் இவர்கள் பல கோடிகளை கொள்ளையடித்து உள்ளனர். தேசிய அளவிலும் இவர்கள் முக்கிய இடங்களை பிடித்துள்ளனர்.
ரெடியா?
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள் எல்லோரும் உடனே அகற்றப்படுவார்கள். மோடிக்கு தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் பேசட்டும். ஆனால் அவருக்கு அந்த தைரியம் இல்லை. அவர் ஒரு பயந்தாங்கொள்ளி, அதை கண்டுபிடித்துவிட்டேன், என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.