ஆணவத்தை விட்டுவிட்டு, விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள்.... பாஜக அரசை விளாசும் சோனியா
டெல்லி: மோடி தலைமையிலான மத்திய அரசு ஆணவத்தை விட்டுவிட்டு விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இந்த விவசாய சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் 40ஆவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட காலம் நிலைக்காது
இந்நிலையில் மோடி அரசு தனது ஆணவத்தை விட்டுவிட்டு, விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இந்தியில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு ஜனநாயகத்தில் பொதுமக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் ஒரு அரசும் அதன் தலைவர்களும் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாது. களைப்படைந்தவுடன் கலைந்துவிடுவார்கள் என்ற மத்திய அரசின் எண்ணம் விவசாயிகளிடம் பலிக்காது என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

வாபஸ் பெற வேண்டும்
இன்னும் நேரம் இருக்கிறது, மோடி அரச அதிகாரத்தின் ஆணவத்தை விட்டுவிட்டு, குளிர் மற்றும் மழையில் உயிரிழந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உடனடியாக இந்த மூன்று கருப்பு சட்டங்களை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும். இதுவே ராஜ தர்மம், போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கும் இது உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

நான் ஆதரிக்கிறேன்
விவசாயிகள், தொழிலாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதே ஜனநாயகம் என்பதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும். டெல்லி எல்லையில் கடந்த 39 நாட்களாக கடும் குளிர் மற்றும் மழையில் போராடுபவர்களின் நிலையைக் கண்டு, நாட்டு மக்களுடன் சேர்ந்து நானும் வருத்தப்படுகிறேன். விவசாயிகளின் கோரிக்கைகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

இதயமற்ற மோடி அரசு
அரசின் புறக்கணிப்பு காரணமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தற்கொலை செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிர் இழந்துள்ளனர். ஆனால் இதயமற்ற மோடி அரசோ பிரதமரோ அல்லது வேறு எந்த அமைச்சர்களும் இன்று வரை இது குறித்து ஒரு ஆறுதல் வார்த்தையைக்கூடக் கூறவில்லை. உயிரிழந்த அனைத்து விவசாய சகோதரர்களுக்கும் எனது மரியாதை செலுத்துகிறேன்.

லாபத்தைப் பெருக்குவதே நோக்கம்
நமது நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களை ஒதுக்கி வைத்து, விவசாயிகளின் போராட்டத்தை கண்டுள்ளதாக ஒரே ஆணவமான அரசு இதுதான். ஒரு சில தொழிலதிபர்களின் லாபத்தைப் பெருக்குவதே இந்த அரசின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளது" என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications