தமிழ்நாட்டில் ஒரு எம்பி கூட கிடைக்கலை.. ஆனால் எங்கள் எதிர்காலம் கண்முன் தெரிகிறது.. நரேந்திர மோடி!
டெல்லி : தமிழ்நாட்டில் இருந்து எம்பி-க்கள் கிடைக்காவிட்டாலும் பாஜக கூட்டணிக்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டில் 543 தொகுதிகளுக்கு நடந்த லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணிக்கு 293 இடங்கள் கிடைத்தன. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்கிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதங்களை கொடுத்த நிலையில், இன்று டெல்லி என்டிஏ எம்பி-க்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எம்பி-க்கள் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து ஓபிஎஸ், ஜிகே வாசன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்பின் என்டிஏ எம்பி-க்கள் கூட்டத்தில் வந்த நரேந்திர மோடி, அங்கு வைக்கப்பட்டிருந்த அரசியமைப்பு புத்தகத்தை கையில் எடுத்துப் வணங்கினார். அதன்பின் என்டிஏ கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் என்டிஏ அனைவரும் இணைந்து நரேந்திர மோடிக்கு ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து கூறினர். இதன்பின் நரேந்திர மோடி பேசுகையில், என்னை என்டிஏ நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்வு செய்த அனைவருக்கும் மிக்க நன்றி. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து கூட்டணி எம்பி-க்களுக்கும் வாழ்த்துகள். வெற்றிக்காக வெயிலையும் பொருட்படுத்தாமல் உழைத்த அனைவருக்கும் தலை வணங்குகிறேன். மக்கள் எனக்கு புதிய பொறுப்பினை கொடுத்துள்ளனர்.
2019ல் எனக்கு கிடைத்த நம்பிக்கை இப்போதும் கிடைத்துள்ளது. என்டிஏ கூட்டணி இணைந்து 22 மாநிலங்களில் அதிக வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை அபரிமிதமானது. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் 7ல் என்டிஏ-வுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே உருவான கூட்டணி வெற்றிகரமான ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும்
என்டிஏ கூட்டணிக்கு எப்போதும் நாடே முதன்மையானது. நாட்டின் வளர்ச்சியில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன். கடந்த 30 ஆண்டுகளில் தற்போது அமைந்துள்ள என்டிஏ கூட்டணி தான் வலிமையானது. வாஜ்பாய், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், பால் தாக்கரே உள்ளிட்டோர் என்டிஏ கூட்டணிக்கு வித்திட்டனர். என்டிஏ என்றால் சிறந்த நிர்வாகம் என்று பொருள். சிறந்த நிர்வாகத்திற்கு சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் உதாரணம்.
அரசு எப்படி நடக்கிறது? எதனால் நடக்கிறது? என்பதெல்லாம் மக்களுக்கு இப்போது தெரிந்துள்ளது. அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே எங்கள் கூட்டணியின் நோக்கம். அரசை நடத்த பெரும்பான்மை பலம் தேவையில்லை. ஒருமித்த கருத்து இருப்பதே முக்கியம். அனைவருக்குமான ஆட்சி நடத்துவதில் என்டிஏ உறுதி பூண்டுள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சமமானவை தான்.
தமிழ்நாட்டில் இருந்து எம்பி-கள் கிடைக்காத போதும் பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது கண்கூடாக தெரிகிறது. இதன் மூலம் என்டிஏ சரியான பாதையில் செல்வதை தமிழ்நாட்டில் கிடைத்துள்ள வாக்குகளே காட்டுகிறது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications