ராகுலிடம் இருந்து ஸ்டாலினுக்கு, வந்த கடிதம்.. சூடுபிடிக்கும் நீட் தேர்வு விவகாரம்.. மேட்டர் இதுதான்!
டெல்லி: நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் எழுந்துள்ளது. இந்நிலையில் தான் நீட் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார்.
நம் நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்பு பயில முடியும். இந்நிலையில் தான் தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இத்தகைய சூழலில் கடந்த மே மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பிறகு ரிசல்ட் வெளியான நிலையில் முறைகேடு புகர் எழுந்தது. இது சர்ச்சையாகி உள்ள நிலையில் தேர்வுக்கு முன்பாகவே பீகாரில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தான் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். அதோடு பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இதனால் நீட் ரத்து கோஷம் என்பது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ‛‛ஜுன் 28 ம் தேதியிட்ட உங்களின் கடிதத்துக்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தி உள்ளது. தேசிய அளவில் மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்த கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. தனியார் நீட் பயிற்சி நிறுவனங்களுக்கு செல்ல முடியாத கிராமப்புற திறமையான மாணவர்களுக்கு நீட் தேர்வில் சமவாய்ப்புடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
இது நமது பொதுக்கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும். மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நான் ஆற்றிய உரையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்த்தது.
மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதி வாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதை தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் காரணமாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடித்ததில், ‛‛நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்'' என தெரிவித்து இருந்தார். இதற்கு தான் ராகுல் காந்தி இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications