டிரைவர்களுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள சூப்பர் ஆப்.. நீண்ட தூரம் போறவங்களுக்கு வரப்பிரசாதம்
டெல்லி: நீண்ட தூரம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, அவசர உதவிகள் தேவைப்படும் போது, எளிதில் தொடர்பு கொள்வதற்காக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடி உள்பட பல்வேறு விவரங்களை அறிய முடியும். இந்த ஆப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் நெடுதூரம் பயணிப்பவர்கள் என்றால் அது டிரைவர்கள் தான். அவர்களுக்கான அடிப்படை தேவைகள், வசதிகள் போன்றவை குறித்து சரியான தகவல்கள் கிடைக்காமல் அவதிப்படும் நிலைஉள்ளது. குறிப்பாக மொழி பிரச்சனை காரணமாக டிரைவர்கள் அவஸ்தை படும் நிலையும் இருக்கிறது.

பொதுவாக நேஷனல் பெர்மிட் லாரிகளில் செல்வோர், தங்கள் பயணம் மூலம் பல்வேறு மொழிகளை பேச கற்றுக்கொள்வார்கள். ஆனால் எழுத்துக்களை படிப்பது மிகவும் கடினம். அவர்கள் எங்கே போகிறார்களோ, அந்த பகுதியில் தேவையான அடிப்படை வசதிகள்பெற வேண்டும் என்பதற்காக தேசிய நெடுஞ்சாலை 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆப்பில் உங்கள் மொபைல் போன் எண்ணை பதிவு செய்து, ஓடிபி கொடுத்து, இ-மெயில் ஐ.டி, இருப்பிடம், வாகன விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்து கொண்டால் நீங்கள் செல்லும் சாலையின் வகை, விபரம், பயணிக்கும் தூரத்தில் உள்ள சுங்கச்சாவடி, அதன் கட்டண விபரம், ஒப்பந்த நிறுவனம் மற்றும் அவர்களது தொலைபேசி எண் ஆகியவற்றை அறியலாம். இதேபோல் டிரைவர்கள் 'ராஜ்மார்க் யாத்ரா' ஆப்பில் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், குறிப்பிடத்தக்க இடங்கள் குறித்த விபரத்தை அறிந்து கொள்ள முடியும்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை திட்ட அதிகாரி பெயர் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை அறிய முடியும். மேலும் பயணிக்கும் வழியில் உள்ள வானிலை நிலவரங்களை நிச்சயம் தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த ஆப்பில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் வசதி மற்றும் பயண அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்ய முடியும்.
அதே நேரம் விதிமுறை மீறி வாகன ஓட்டிகள் பயணித்தால், ஜி.பி.எஸ்., வாயிலாக கண்காணிக்கப்பட்டு டிரைவர்களுக்கு எச்சரிக்கையும் சிக்னல்களும் அனுப்பி வைக்கப்படும்.நீண்ட தூரம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, அவசர உதவிகள் தேவைப்படும் போது, எளிதில் தொடர்பு கொள்வதற்காகவே இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், தேவைப்பட்டால் இந்த ஆப்பின் வாயிலாக நெடுஞ்சாலை ஆணைய அவசர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளவும் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications