செம! முதலில் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே! அடுத்து இப்போ சென்னை-கொல்கத்தா! வந்த குஷியான தகவல்
டெல்லி: இப்போது சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே அமைச்சர் நிதின் கட்கரி கொல்கத்தா-சென்னை தங்க நாற்கர சாலை குறித்த சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்,
உலகின் எந்தவொரு நாடும் வளர்ச்சியடைய அந்நாட்டின போக்குவரத்து உள்கட்டமைப்பு முக்கியம். பொதுமக்கள் நகரங்களுக்கு இடையே எளிதாகப் பயணிக்க வலுவான ஒரு போக்குவரத்து உள்கட்டமைப்பு நிச்சயம் தேவை.
இப்படிச் சிறப்பான போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் தான் நன்கு வளர முடியும். மேலும், ஓர் இடத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களும் மற்ற இடங்களுக்கு எடுத்த செல்ல வலுவான சரக்கு உட்கட்டமைப்பு தேவை.

மத்திய அரசு
இதனால் முக்கிய நகரங்களை இணைக்கப் பல புதிய சாலைகளை அமைத்து வருகிறது. அதிலும் சமீப காலங்களாக முக்கிய நகரங்களை இணைக்கும் புதிய சாலைகள் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கனரக வாகனங்கள் நகரங்களுக்குள் வராமல் கடந்து செல்ல ரிங் ரோடு எனப்படும் புறவழிச்சாலை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அதேபோல நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் வே எனப் பல வகை சாலைகளை இப்போது மத்திய அரசு போட்டு வருகிறது.

கொல்கத்தா-சென்னை தங்க நாற்கர பாதை
இந்த புதிய சாலைகளால் பயண நேரம் கணிசமாகக் குறைகிறது. இதன் மூலம் வளர்ச்சியை வேகப்படுத்த முடியும். இப்போது சென்னை பெங்களூர் இடையே எக்ஸ்பிரஸ் வே பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கொல்கத்தா-சென்னை தங்க நாற்கர பாதை குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, கொல்கத்தா-சென்னை தங்க நாற்கர பாதையின் சண்டிகோல்-பத்ரக் பகுதியை ஆறுவழி நெடுஞ்சாலையாக மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏன் முக்கியம்
இந்த சாலை மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் செல்கிறது. ஒடிசாவின் கடலோரப் பகுதிகளை இணைக்கும் முதன்மை சாலையாக இது செயல்படுகிறது. மேலும், அரதடி அகண்டல்மணி கோயில், மா பிரஜா கோயில், ஸ்வேதா பராஹா, பத்ரகாளி கோயில், தாம்நகர், தாம்ரா துறைமுகம் மற்றும் சந்த்பாலி நதி துறைமுகம் எனப் பல பிரபல சுற்றுலாத் தலங்களை இது இணைக்கிறது. மேலும் விவசாய, உற்பத்தி மற்றும் தொழில்துறை மற்றும் சுரங்க பொருளை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து இதில் முக்கியமானதாக இருந்து வருகிறது.

பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம்
இது குறித்து நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடியின் தலைமையில், சாலையின் திறன், வேகம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் அதே நேரத்தில் சீரான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை நாங்கள் உறுதி செய்கிறோம். இவை தேசிய நெடுஞ்சாலைகளுக்கான அளவுகோல்களை மேம்படுத்துவதுடன் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குகள் மற்றும் பயணிகள் போக்குவரத்தை அதிகரிக்கிறது. மேலும், இது பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதென்ன தங்க நாற்கர சாலை
5,846 கிலோமீட்டர் நீளமுள்ள தங்க நாற்கர சாலை இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை நெட்வொர்க் ஆகும். இது உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 1999ஆம் ஆண்டு அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது அவரது கனவுத் திட்டமாகும். தங்க நாற்கர சாலை டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு பெருநகரங்களை இணைக்கும் சாலையாகும். நிலம் கையகப்படுத்தல் சிக்கல்கள் காரணமாக இத்திட்டம் தாமதமானது. இருப்பினும், இந்தத் திட்டம் 2001இல் தொடங்கப்பட்டு 2012இல் நிறைவடைந்தது.

எந்த சாலைகளை இணைக்கிறது
தங்க நாற்கர பாதை 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் வழியாகச் செல்கிறது. இது இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது கொல்கத்தாவிலிருந்து டெல்லி வரை 1,563 கிலோமீட்டர் சாலையாக உள்ளது. டெல்லி முதல் மும்பை வரை 1,419 கிலோமீட்டர் சாலையாக உள்ளது. அதேபோல மும்பை முதல் சென்னை வரை 1,290 கிலோமீட்டராகவும் கொல்கத்தாவிலிருந்து சென்னை வரை 1,684 கிலோமீட்டர் வரையும் நீண்டுள்ளது.












Click it and Unblock the Notifications