திரண்டு வந்த எதிர்க்கட்சி தலைவர்கள்..துணை ஜனாதிபதி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா வேட்புமனுத்தாக்கல்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளரான மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, தேசியவதாக காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், திமுகவின் திருச்சி சிவா எம்பி, விடுதலை சிறுத்தைகள் எம்பி திருமாவளவன் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.
இந்திய துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு உள்ளார். இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.
இதனால் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினம் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மார்கரெட் ஆல்வா போட்டி
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் களமிறக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக செயல்பட்டு வரும் இவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதேபோல் எதிர்க்கட்சிகள் சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார்.

வேட்புமனுத்தாக்கல்
இந்நிலையில் மார்கரெட் ஆல்வா இன்று டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் துணை ஜனாதிபதி தேர்தலுக்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், திமுக எம்பி திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

யார் இந்த மார்கரெட் ஆல்வா?
எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்கரெட் ஆல்வா கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர். இவர் 1942ம் ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்த மார்கரெட் ஆல்வாவுக்கு தற்போது 80 வயது ஆகிறது. சட்டம் படித்துள்ள இவர் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். 4 முறை ராஜ்யசபா எம்பியாகவும், ஒரு முறை லோக்சபா எம்பியாகவும் இருந்துள்ளார். மேலும் மத்திய அமைச்சராகவும் செயல்பட்டுள்ள இவர் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அதன்பிறகு உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத், கோவா மாநில கவர்னராக செயல்பட்ட அனுபவம் கொண்டுள்ளார். சமீப காலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவு
முன்னதாக இந்தியாவின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று இந்தியா முழுவதும் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த ஓட்டுக்கள் ஜூலை 21ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தான் தற்போது துணை ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்துெள்ளது.












Click it and Unblock the Notifications