மியான்மர் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி.. ஆங் சான் சூகிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: மியான்மரில் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதற்காக ஆங் சான் சூகிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா மியான்மர் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பை வலுப்படுத்த ஆங் சான் சூகி உடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்புடன் உள்ளேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மியான்மரில் பல்லாண்டு காலமாக நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி அதில் வெற்றி பெற்றவர் ஆங் சான் சூகி. இதற்காக அவர் பல ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பபட்டது.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் 2015ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் இரண்டாவது முறையாக அண்மையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியமைக்க தேவையான 322க்கும் அதிகமான இடங்களில் வென்று மீண்டும் ஜனநாயக தேசிய லீக் ஆட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஆங் சான் சூகி மற்றும் அவரது ஜனநாயக தேசிய லீக் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தேர்தல்களை வெற்றிகரமாக நடத்துவது மியான்மரில் நடந்து வரும் ஜனநாயக மாற்றத்தின் மற்றொரு படி என்று பிரதமர் மோடி டுவிட்டர் புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன் இந்தியா மியான்மர் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பை வலுப்படுத்த ஆங் சான் சூகி உடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்புடன் உள்ளேன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications