ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே அரசின் நோக்கம் - பிரதமர் மோடி
டெல்லி: ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு ரத்து அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீரையும், லடாக்கையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
காஷ்மீரின் எதிர்காலம் வளர்சி திட்டம் தொடர்பாகவும், அங்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது.

மோடி தலைமையில் ஆலோசனை
அதன்படி இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என ஆறு கட்சிகள் உள்ளடக்கிய 14 குப்கர் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீண்டும் கொடுக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் நில உரிமையை மதிக்க வேண்டும், அங்கு மாநில மாநில தேர்தல் நடத்த வேண்டும் என்று குப்கர் கூட்டணி தலைவர்கள் ஒருசேர பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.

புகைப்படம் எடுத்தனர்
காஷ்மீரில் எல்லை வரையறை செய்த பின்பு தேர்தல் நடத்துவதை பிரதமர் மோடி உறுதி செய்தார். மேலும் காஷ்மீரில் அனைத்து வளர்ச்சி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கூறினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் இந்த கூட்டம் தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

அடிமட்ட ஜனநாயகம்
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் தலைவர்களுடனான இன்றைய சந்திப்பு ஒரு வளர்ந்த மற்றும் முற்போக்கான ஜம்மு-காஷ்மீரை நோக்கிய தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு முக்கியமான படியாகும், அங்கு அனைத்து வகையான வளர்ச்சியும் முன்னேறுகிறது. ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எங்கள் முன்னுரிமையாகும்.

பலமே இதுதான்
அங்கு தேர்தல்கள் விரைவாக நடக்க வேண்டும். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மூலம் ஜம்மு-காஷ்மீரில் மேலும் வலிமை பெறுகிறது. நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமே ஒரு மேஜையில் உட்கார்ந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் திறனாகும். பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்களுக்கு ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். அவர்களின் அபிலாஷைகளை முறையாக நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களிடம் கூறினேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications