நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்கும் .. கவர்னர்களுடன் ஆலோசனை நடத்திய மோடி உறுதி!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மாநில சுகாதாரத்துறை, யூனியன் பிரதேச ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.
அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் மோடி கூறினார்.

வேகமெடுக்கும் கொரோனா
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. தினசரி பாதிப்புகள் 1,60,000-ஐ கடந்து செல்கின்றன. மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும் கொரோனா கட்டுக்கடங்காமல் செல்கிறது. கொரோனவை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் 15 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகம் உள்பட ஏறக்குறைய அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

மோடி ஆலோசனை
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று கொண்டிருப்பதால் பிரதமர் மோடி அனைத்து மாநில சுகாதாரத்துறை, யூனியன் பிரதேச ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் கொண்டார். கொரோனா பரவல், தடுப்பு வழிமுறைகள், தடுப்பூசி செயல்பாட்டு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

தடுப்பூசிகள் போதுமான அளவு கிடைக்கும்
அப்போது அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என்று மோடி கூறினார். தடுப்பூசிகள் போடப்படுவது தொடர்பாக சமூக நிறுவனங்கள் மாநில அரசுகளுடன் தடையின்றி ஒத்துழைப்பதை உறுதி செய்ய ஆளுநர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் குற்றச்சாட்டு
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி முதல் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார். ஆனால் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக மத்திய அரசிடம் புகார் தெரிவித்தன. மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications