இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதே "இந்தியா" கூட்டணியின் திட்டம்.. பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: இந்தியா கூட்டணிக் கட்சிகள் நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரை இரண்டாம் தரக் குடிமக்களைப் போல மாற்ற முயல்வதாகப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மட்டும் நடக்க உள்ளது.

ஜூன் 1ஆம் தேதி நடக்கும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவில் உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
பிரதமர் மோடி: இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் கோஷி என்ற இடத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தை மாற்ற இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
இரண்டாம் தரக் குடிமக்கள்: அவர் மேலும் பேசுகையில், "இந்த 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்தை (இந்துக்களை) இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்ற விரும்புகிறார்கள்.. அவர்களின் உரிமைகளைப் பறிக்க எதிர்க்கட்சிகள் மூன்று பெரிய சதிகளைச் செய்துள்ளனர். அவை என்ன சதிகள் என்பதையும் நானே உங்களுக்கு விளக்குகிறேன்.
முதலில், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் அரசியல் சட்டத்தை மாற்ற எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.. அடுத்து இரண்டாவதாக, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை எதிர்க்கட்சிகள் ரத்து செய்யும்.. மூன்றாவதாக, மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு முழுவதுமாக வழங்கப்படும். இதுவே அவர்கள் திட்டம்.
3 பிரிவுகளாக இந்துக்கள்: சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தப் போவதாக எதிர்க்கட்சிகள் கூறியிருக்கிறார்கள். அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியுமா... இந்துக்களைத் தலித்துகள், ஓபிசிகள் மற்றும் பொதுப் பிரிவினர் என்று பிரிப்பதே அவர்கள் பிளான். இதன் மூலம் அவர்களை தங்களுக்குள் சண்டையிட வைத்து அவர்களைப் பலவீனமானவர்களாக மாற்றி, முக்கியமான பிரச்சினைகளில் இருந்து திசை திரும்ப முயல்கிறார்கள்..
நானும் உங்களைப் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்தான். உங்கள் வாழ்க்கையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அம்பேத்கர் தலித்துகளின் வாழ்க்கையை முன்னேற்ற இட ஒதுக்கீடு வழங்கி இருந்தார். ஆனால், இங்குள்ள சமாஜ்வாதி கட்சி அதே இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்குவோம் என்று கடந்த 2012ஆம் ஆண்டிலேயே தேர்தல் வாக்குறுதியை அளித்தனர்.
அம்பேத்கர் ஆன்மா: இது அரசியலமைப்பு மட்டுமின்றி அம்பேத்கரின் ஆன்மாவிற்கும் எதிரானது.. ஆனால் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இது குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை" என்றார். பாஜக 400 சீட்களில் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றிவிடும் என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நரேந்திர மோடி இதுபோல பேசியிருக்கிறார்.
அதேபோல மற்றொரு இடத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய மோடி, "இந்தியா கூட்டணி மறைமுகமாகப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.. எல்லைக்கு அப்பால் உள்ள ஜிஹாதிகள் ஆதரிக்கிறார்கள்.. இந்தியா கூட்டணி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை வாபஸ் பெறுவார்கள். அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் ரத்து செய்வார்கள்.. தேசத்திற்கு எதிரான சக்திகள் இதை விரும்புகின்றன" என்றார்.












Click it and Unblock the Notifications