யோகா செய்யுங்கள்.. கொரோனாவை வீழ்த்துங்கள்.. பிரதமர் நரேந்திர மோடி உரை
டெல்லி: சர்வதேச அளவில் ஒற்றுமைய பறைச்சாற்றும் நாளாக இந்த யோகா தினம் அமைந்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் இன்று காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில் 6ஆவது சர்வதேச யோகா தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் நாளாக இது அமைந்துள்ளது. வீட்டிலிருந்தபடியே குடும்பத்துடன் யோகா செய்யுங்கள்.
யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஏராளமானோர் யோகா கற்றுக் கொள்ள ஆர்வம் கொண்டுள்ளார்கள். கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறையாக இருக்கிறது.
உங்களது அன்றாட வாழ்வில் யோகாவை ஒரு அங்கமாக பழகுங்கள். யோகா உடல் வலிமையுடன் மன வலிமையையும் மேம்படுத்துகிறது. யோகாவிற்கு மதம், மொழி, நாடு என்ற எந்த பேதமும் இல்லை.
யோகாவின் பயன்களை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகம் தற்போது உணர்ந்துள்ளது. பகவத் கீதையில் கூட யோகா குறித்து கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வர யோகா செய்யுங்கள் என்றார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications