3வது முறையாக மத்திய அமைச்சர்.. ஆனாலும் இந்தி தெரியாது.. யார் இந்த நிர்மலா சீதாராமன்?
டெல்லி : தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் 3வது முறையாக மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், அவர் அரசியல் பயணித்து வந்த பாதையை பார்க்கலாம்.
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். அவருடன் சேர்ந்து மொத்தமாக 72 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். 30 மத்திய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் ஆங்கிலத்தில் பதவியேற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் வணிகவியல் படித்தவர். அங்கிருந்து டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்தவர். ஜேஎன்யூ-வில் படித்த போது தான் ஆந்திராவைச் சேர்ந்த தனது கணவரான பரகலா பிரபாகரை சந்தித்து 1986ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக லண்டனில் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர் நிறுவனத்தில் பகுப்பாய்வு துறையில் மேலாளராக பணியாற்றினார்.
அதன்பின் பிபிசியில் பணியாற்றிய நிர்மலா சீதாராமன், 1990களில் இந்தியாவுக்கு திரும்பினார். அதன்பின் ஐதராபாத்தில் பிரணவ பள்ளிகளை நிறுவினார். அதன்பின் கணவர் பரகலா பிரபாகர் குடும்பம் காங்கிரஸ் பின்னணியை கொண்டது என்றாலும், 2008ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது நிர்மலா சீதாராமனுக்கு பாஜகவின் தேசிய செயற்குழுவில் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் பேசிய பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
பின்னர் பாஜக தேசிய தலைவராக நிதின் கட்கர் வந்த போது, நிர்மலா சீதாராமனுக்கு தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பாஜகவின் கொள்கைகளை பேசி வந்த நிர்மலா சீதாராமன், 2014ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அதன்பின் 2019ஆம் ஆண்டு மீண்டும் பாஜக ஆட்சியமைத்த போது, நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.
இந்திரா காந்திக்கு பின் நாட்டின் 2வது நிதியமைச்சர் என்ற பெருமை நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்தது. நேரடியாக மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றாலும், 3வது முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், இப்போதும் முழுமையாக இந்தி பேச தெரியாது என்று வெளிப்படையாக கூறுபவர். இதன் காரணமாகவே நிர்மலா சீதாராமன் பதவியேற்ற போது ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications