ஜனாதிபதி தேர்தல்: திரெளபதி முர்முக்கு காங். கூட்டணி கட்சி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு தெரிவித்துள்ளது.
நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜூலை 21-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பாஜக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 10,86,431 வாக்குகள் உள்ளன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், மாநில கட்சிகள் ஆதரவுடன் மொத்தம் 6.67 லட்சம் வாக்குகள் ஆதரவை திரெளபதி முர்மு பெற்றுள்ளார்.
ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத்தவர் என்பதால் அம்மாநில ஆளும் பிஜூ ஜனதா தளமும் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. பிஜூ ஜனதா தளத்துக்கு மொத்தம் 32,000 வாக்குகள் உள்ளன. மொத்த வாக்குகளில் இது 2.9% சதவீதமாகும். பிஜூ ஜனதா தளத்துக்கு 114 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பிக்கள் உள்ளனர். திரெளபதி முர்முவுக்கு ஏற்கனவே 17,200 வாக்குகள் கொண்ட அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. 44,000 வாக்குகள் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், 6,500 வாக்குகள் கொண்ட தெலுங்குதேசமும் திரெளபதி முர்முவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனாவுக்கு 25,000 வாக்குகள் உள்ளன. இந்த கட்சியும் திரெளபதி முர்ம்வை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 5,600 வாக்குகள் இருக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளமும் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் திரெளபதி முர்முவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் திரெளதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. நாடு விடுதலை அடைந்த பின்னர் முதல் முறையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் பாஜக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்முவை ஆதரிப்பது அக்கட்சியை கடும் அதிருப்தி அடைய வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications