ரஷ்ய பயணத்தை தொடர்ந்து.. உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி! போர் நிறுத்தம் குறித்து பேச வாய்ப்பு
டெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆக.21ம் தேதி உக்ரைன் செல்கிறார். கடந்த மாதம் மோடி ரஷ்யா சென்றிருந்தது, ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் சலசலப்புகளை கிளப்பியிருந்தது. இதனையடுத்து உக்ரைன் பயணம் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.
சோவியத் காலத்தில் அதற்கு போட்டியாக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. ஆனால், சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கப் புள்ளி. கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொண்டே வந்த அமெரிக்காவின் நேட்டோ, கடைசியாக உக்ரைனுக்கு வந்து நின்றது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஆதரவாளர். எனவே, நேட்டோவுக்கு அனுமதியளித்தார்

இது ரஷ்யாவுக்கு எரிச்சலை கிளப்பியது. உக்ரைன் ரஷ்யாவுக்கு பக்கத்தில் உள்ள நாடு. ஏற்கெனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏழரை சனி. இப்படி இருக்கும்போது உக்ரைன், நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ பெயரில் அமெரிக்க படைகள் நேரடியாக ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இது ரஷ்யாவுக்கு பெரும் அச்சுறுத்தல். எனவே ரஷ்யா போரை அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த போர் தொடங்கியது.
2 வாரங்கள்தான் போர் நீடிக்கும் என்று ரஷ்யா சொன்னது. ஆனால், அமெரிக்கா கொடுத்த ஆயுத உதவியால் 2 ஆண்டுகள் கடந்து இப்போதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அங்கு புதின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து, இந்தியா-ரஷ்யா உறவை மேலும் முன்னோக்கி நகர்த்தியிருந்தார்.
இந்தியாவுக்கு இது முக்கிய நிகழ்வாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளுக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை, அமெரிக்காவுக்கும்தான். இதனால் இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படக்கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக இருக்கிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.21ம் தேதி உக்ரைன் செல்லும் மோடி, அங்கு அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, போலந்துக்கும் மோடி செல்ல வாய்ப்பிருக்கிறது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, போருக்கான தீர்வு பேச்சுவார்த்தைதான் என்று கூறியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில், “வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. போர் குறித்து, இந்தியா மனிதாபிமானத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையை தீர்வு என்று நம்புகிறது. பேச்சுவார்த்தைதான் அமைதிக்கான வழி என்று நம்புகிறது” என்று மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications