10, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு.. சிபிஎஸ்இ மேஜர் பிளான்! எப்போது நடைமுறைக்கு வரும்?
டெல்லி: மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ யில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளானது ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், அதற்கான செயல்திட்டத்தை வகுக்கும் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. பல கட்டங்களில் மாணவர்களின் கற்றல் திறனானது மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் கூட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இதற்காக கடந்த 2010 ஆம் ஆண்டு இதன் பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகளாவிய தரத்தில் பாடத்திட்டத்தினை உருவாக்கம் செய்து, மாணவர்கள் இடையே உலக அளவில் போட்டித்திறனை உருவாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தான், அடுத்த கல்வி ஆண்டு (2026 -2027)-இல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நேற்று முன் தினம் உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிபிஎஸ்இ, நவோதயா, கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் எப்படி செயல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்றவாறு விரிவான செயல் திட்டத்தினை தயார் செய்யவும் சிபிஎஸ்இக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இதற்காக தேர்வு முறையும் மாற்றப்பட உள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு தற்போது ஒருமுறை நடத்தப்படும் இந்த பொதுத்தேர்வினை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டங்கள் கல்லூரி படிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது இது, அடுத்த கல்வியாண்டில் அமலாகலாம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications