ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. பிப்.26 முதல் விசாரணை தொடங்கும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!
ரபேல் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுக்களை வரும் பிப்ரவரி 26ம் தேதியில் முதல் உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ய இருக்கிறது.
டெல்லி: ரபேல் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுக்களை வரும் பிப்ரவரி 26ம் தேதியில் முதல் உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ய இருக்கிறது.
ரபேல் வழக்கு மீண்டும் ஒருமுறை இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்த உள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் மனுதாரர்களில் ஒருவாரான பிரஷாந்த் பூஷனிடம் தெரிவித்து இருந்தது.
தெரிவித்தது போலவே தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் செவ்வாய் கிழமையில் இருந்து இந்த வழக்கு விசாரிக்கப்படும். ரபேல் ஒப்பந்தத்தில் நடந்து முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. ஆனால் இதில் அப்போது போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை.
இதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து இதையடுத்து வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் வரிசையாக தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அதன் மீதான விசாரணைதான் தற்போது தொடங்க இருக்கிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்த உள்ளது. இதே அமர்வுதான் இந்த வழக்கை முதலில் விசாரித்தது என்பதால் அதே அமர்வு மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.