ஆரோக்கிய சேது செயலி குறித்து சந்தேகம் எழுப்பிய ராகுல்... பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ரவிசங்கர்
டெல்லி: ஆரோக்கிய சேது செயலி தனிமனித பாதுகாப்பு கவலைகளை எழுப்புவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆரோக்கிய சேது செயலி மக்களை பாதுகாக்கும் சக்திவாய்ந்த துணை என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு தகவல்களை மக்கள் பெறுவதற்கு வசதியாக ஆரோக்கிய சேது செயலியை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அறிமுகம் செய்தது. இதற்கு நாடு முழுவதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் இதனை லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆரோக்கிய சேது ஆப் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது ட்வீட்டரில் பதிவு வெளியிட்டுள்ள அவர், ஆரோக்கிய சேது ஆப் அதிநவீன கண்காணிப்பு செயலி தான், இருப்பினும் இதனை அவுட்சோர்சிங் மூலம் தனியார் அமைப்பு வடிவமைத்துள்ளதால் தனிமனித பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுவதாக கூறியுள்ளார். மேலும், மக்களை இந்த செயலி மூலம் அவர்கள் அனுமதியின்றி கண்காணிக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தியின் இந்த டீவிட்டர் பதிவுக்கு சுடச்சுட பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆரோக்கிய சேது ஆப் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டது என்றும், மக்களை பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு துணையாக இந்த செயலி திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் பிறரை கண்காணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு தொழில்நுட்பத்தை நல்ல விஷயத்திற்காக எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரியாது என ராகுலை சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications