எதிர்க்கட்சி, ஆளும் கட்சி எம்பிக்கள் வாக்குவாதம்! மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி: மாநிலங்களவை சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்துக்கொள்வதாகவும், அவரை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இன்று எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்பிக்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்தது. இதனையடுத்து மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்திருந்தார். நேற்று இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “பேச்சுரிமை, கருத்துரிமை, ஜனநாயகம் குறித்து பேசும்பொதெல்லாம், பேசுபவர்களை முடக்கும் பணி வலுக்கட்டாயமாக நடைபெற்று வருகிறது. இத்தனை காலமாக காப்பாற்றப்பட்டு வந்த நாடாளுமன்ற நடைமுறைகள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், காலங்காலமாக மதிக்கப்படும் நாடாளுமன்ற நடைமுறைகளைப் பாதுகாப்பதற்கும் நாம் கொண்டு வரும் தீர்மானம், ஆளும் கட்சியின் தாக்குதலால் மேலும் வலுவடையும்.
மாநிலங்களவையின் சபாநாயகர் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பட்டியலிட மறுக்கிறார். தேவையற்ற கெடுபிடியை பின்பற்றுகிறார். இப்படி செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கருத்து சுதந்திரத்தை முற்றிலுமாக முடக்குகிறார். இத்துடன் அவர் நிற்கவில்லை. தனது அதிகாரத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்திருக்கிறார். முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த இடைநீக்கங்கள் அதிகரித்துள்ளன.
மேலும் சபாநாயகர் ஜகதீப் தன்கர் அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது பாஜகவின் கருத்து பிரதிபலிப்பதாக இருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.
இது குறித்து இன்று ஆளும் கட்சி உறுப்பினர்கள், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பவே மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம் எழுந்தது. இதனையடுத்து அவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications