ரோகித் சர்மா - சேத்தன் சர்மா “டீலிங்”.. ஆஃபர் கோரி வீட்டுக்கே போனாராம்! ஸ்டிங் ஆபரேசனில் ஷாக் தகவல்
இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தங்களுக்கு சலுகை கேட்டு தன் வீட்டுக்கே வந்ததாகவும் இந்திய அணியின் அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்
டெல்லி: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தங்களுக்கு சலுகைகளை வழங்கக்கோரி தனக்கு தொடர்ந்து தொடர்புகொண்டதாகவும், அடிக்கடி தன்னுடைய வீட்டுக்கே அவர்கள் வந்ததாகவும் இந்திய அணியின் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பேசியது ஸ்டிங் ஆபரேசனில் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக பதவி வகித்து வருபவர் சேத்தன் சர்மா. இவரது தலைமையிலான குழு தேர்வு செய்து அனுப்பும் அணி குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியடைந்ததற்கு மோசமான அணி தேர்வே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சேத்தன் சர்மா உட்பட அவர் தலைமையிலான குழு மொத்தமாக கலைக்கப்பட்டது.

ஸ்டிங் ஆபரேஷன்
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சேத்தன் சர்மா மீண்டும் அதே பொறுப்பில் அமர வைக்கப்பட்டு உள்ளார். இது பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில், தனியார் தொலைக்காட்சி ரகசிய கேமராவை வைத்து இவரிடம் பேசி ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. அதில் பிசிசிஐயில் நடக்கும் அரசியல், அணி தேர்வு உள்ளிட்ட பல ரகசியங்களை அவர் வெளியிட்டார்.

தேர்வுக்குழுவின் முடிவு
அதில் பேசிய சேத்தன் சர்மா, "சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்தபோது விராட் கோலியை இந்திய கேப்டன் பதவியில் இருந்து நீக்க விரும்பவில்லை. ஆனால், சவுரவ் கங்குலிக்கும் விராட் கோலியை பிடிக்காது. விராட் கோலியை இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை கேப்டனாக கொண்டு வர வேண்டும் என தேர்வுக்குழுவே முடிவு செய்தது.

விராட் கோலிக்கு எதிராக செயல்பட்டோம்
நாங்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக செயல்படவில்லை. விராட் கோலிக்கு மட்டுமே எதிராக செயல்பட்டோம். கேப்டன் பதவி தொடர்பாக இந்திய அணிக்கு உள்ளேயே நிறைய பிரச்சனைகள் சென்றுகொண்டு இருந்தன. கேப்டன் பதவிக்கான போட்டியும் அதிகமாக இருந்தது. விராட் கோலி மோசமான ஃபார்மில் இருந்ததை வாய்ப்பாக பயன்படுத்தி அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சலுகை கேட்ட ரோகித் சர்மா, ஹர்திக்
ரோகித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் தங்களுக்கு சலுகை வழங்குமாறு அடிக்கடி எனக்கு தொடர்புகொண்டே இருந்தனர். அடிக்கடி என்னுடைய வீட்டுக்கும் அவர்கள் வருகை தந்தனர். ரோகித் சர்மா நீண்ட காலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டார். ஹர்திக் பாண்டியாதான் இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்படுவார்.

அடுத்த கேப்டன் ஹர்திக் தான்
டி20 போட்டிகளில் இந்தியாவின் எதிர்காலமாக ஹர்திக் பாண்ட்யா இருப்பார். ரோகித் சர்மா, விராட் கோலிக்கு டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷுப்மன் கில் மற்றும் 15 - 20 வீரர்களை இந்திய அணிக்கு கொண்டு வந்தேன்." என்று அவர் கூறியுள்ளார். இந்த கருத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications