"பிரதமர் மோடி ஒரு படிப்பாளி! அவரை காலேஜ் படிக்கும்போது பார்த்துள்ளேன்!" மூத்த பத்திரிக்கையாளர் தகவல்
டெல்லி: பிரதமர் மோடியின் கல்லூரி படிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், 1981இல் மோடி கல்லூரியில் படிக்கும் போது அவரை சந்தித்ததாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்துத் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். அது மட்டுமின்றி பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்த விவரங்களைக் கோரி அவர் வழக்கும் தொடர்ந்திருந்தார்.
பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ் முற்றிலும் போலியானவை பொய்யாக இருக்கலாம் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துள்ளதாக கெஜ்ரிவால் விமர்சித்து வருகிறார். மேலும், படிக்காத ஒருவர் நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பது நல்லதில்லை என்றும் அவர் கூறி வருகிறார்.

விமர்சனம்: இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரதமரை விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "புதிய இந்தியாவில் வெளிப்படத்தனைமை தேவை. நமது அரசியல் அதைச் சார்ந்தே இருக்க வேண்டும். எனவே, பிரதமர் மோடியின் கல்லூரி படிப்பை உறுதி செய்ய வேண்டும். அதில் யாருக்கு என்ன பிரச்சினை எனப் புரியவில்லை" என்று விமர்சித்திருந்தார்.
ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துத் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாக மூத்த செய்தியாளர் ஒருவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிக்கையாளர் ஷீலா பட், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது 1981இல் கல்லூரியில் படிக்கும் போது பிரதமர் நரேந்திர மோடியை முதன்முறையாகச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.
பதில்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "1981ல் மோடியை அவர் எம்.ஏ. இரண்டாம் பாகம் படித்துக் கொண்டிருந்தபோது முதன்முறையாகச் சந்தித்தேன். அவருடைய வழிகாட்டி பேராசிரியராக பிரவின் ஷேத் என்பவர் இருந்தார். எனது வழிகாட்டி பேராசிரியராகவும் அவரே இருந்தார். இதன் காரணமாகவே அப்போது நான் பிரதமர் மோடியைச் சந்தித்தேன். அவர் மிகவும் படிப்பாளியாக இருந்தார்.
சிறிது காலத்திற்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவாலும், காங்கிரஸும் ட்விட்டரில் பிரதமர் மோடி கல்வித் தகுதி குறித்து கேள்வி எழுப்பிய போது, எனது பழைய நண்பனுக்கு போன் செய்தேன். அவனும் அப்போது மோடியை சந்தித்துள்ளார். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இப்படி விமர்சிக்கும் நிலையில், இது குறித்துச் சொல்லுமாறு வகுப்பு தோழனிடம் கேட்டேன். இருப்பினும், அவர் அப்போது எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் கல்வித் தகுதி குறித்து பல்வேறு எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், ஷீலா பட்டின் இந்த பேட்டி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications