கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்!
டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் தீவிரம் காட்டுகிறார்கள். மறுபக்கம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. கரூர் வழக்கு தொடர்பாக டெல்லியில் செந்தில் பாலாஜி இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். அப்போது அவரிடம் 6 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரூர் கூட்ட நெரிசல்
விஜய்யிடம் ஏற்கனவே 2 முறை டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். நேற்று முன்தினம் விஜய்யிடம் மூன்றாவது முறையாக சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் விசாரணை நடத்தினார்கள். சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டணிக்காக பாஜக நெருக்கடி கொடுப்பதாகவும் புகார் எழுந்தது. ஆனால் அதிமுக - பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக அறிவித்துவிட்டது.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை
கரூர் சம்பவத்தில் ஆரம்பம் முதலே தவெகவினர் திமுக மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். கரூரில், பாட்டிலுக்கு 10 ரூபாய் என விஜய் பாடியபோது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் செருப்பை வீசியதாக தவெகவினர் கூறினர். செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளில் பல்வேறு புகார்களை முன் வைத்தனர்.
விஜய்யே நேரடியாக சிபிஐ அதிகாரிகளிடம் புகார் சொன்னார். அதனடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் மார்ச் 17 ஆம் தேதி (இன்று) விசாரணை நடத்துவதற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் இன்று விசாரணை நடத்தினர். இதற்காக செந்தில் பாலாஜி நேற்று டெல்லி சென்ற நிலையில் இன்று காலையில் சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகினார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து 6 மணி நேர விசாரணை நடந்தது. இதையடுத்து அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications