"செரோ சர்வே".. இந்தியாவில் 67.6% பேரிடம் கொரோனா ஆண்டிபாடி.. ஹெர்ட் இம்மியூனிட்டியை நெருங்குகிறதா?
டெல்லி: இந்தியாவில் 67.6 சதவிகிதம் பேரிடம் கொரோனா ஆண்டிபாடி இருப்பதாக செரோ சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான ஹெர்ட் இம்யூனிட்டியை இந்தியா நெருங்கிவிட்டதோ என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது.
கொரோனா பரவல் இந்தியாவில் தொடங்கியதில் இருந்தே ஐசிஎம்ஆர் செரோ சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 3 செரோ சர்வே முடிவடைந்த நிலையில், 4வது செரோ சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
4வது செரோ சர்வே முடிவின்படி இந்தியாவில் 67.6 சதவிகிதம் பேருக்கு கொரோனா ஆண்டிபாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 40 கோடி பேருக்கு உடலில் கொரோனா ஆண்டிபாடி இல்லை என்று செரோ சர்வே முடிவுகள் தெரிவிகின்றன.

எப்படி
ஒரு பகுதியில் குறிப்பிட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்து அவர்களின் உடம்பில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள். ரத்தத்தில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருந்தால் அவர்களுக்கு கொரோனா வந்து குணமாகி இருப்பதாக அர்த்தம். ஒருவரின் உடலில் இருக்கும் IgM அல்லது IgG ஆண்டிபாடி இருப்பதை வைத்து அவர்களுக்கு கொரோனா வந்துவிட்டு போய் இருக்கலாம் என்று உறுதி செய்யப்படும். இதுவே செரோ சர்வே.

கண்டுபிடிப்பு
இதை கண்டுபிடிக்க எளிமையான முறை ஒன்றை ஐசிஎம்ஆர் கடைபிடிக்கிறது. பொதுவாக ஒருவருக்கு கொரோனா வந்து சென்ற பின் 2 வாரத்தில் IgG ஆண்டிபாடி உருவாகும். செரோ சர்வேயில் எவ்வளவு IgG ஆண்டிபாடி இருக்கிறது என்றுதான் கண்டுபிடிக்கப்படும். இதை வைத்து கொரோனா பரவல் குறித்து கண்டுபிடித்துவிட முடியும்.

ஹெர்ட் இம்மியூனிட்டி
இந்தியாவில் 67.6 சதவிகிதம் பேரிடம் கொரோனா ஆண்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா ஹெர்ட் இம்மியூனிட்டியை நெருங்கிவிட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஹெர்ட் இம்மியூனிட்டிக்கு இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அதன்படி ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் பால்ராம் பார்கவா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் முடியவில்லை.

40 கோடி பேர்
இன்னும் 40 கோடி பேருக்கு செரோ சர்வேயின்படி கொரோனா ஏற்படவில்லை. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஹெர்ட் இம்மியூனிட்டிக்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. குழந்தைகள், ,முதியவர்கள் பலருக்கு இப்போதும் கொரோனா ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மொத்தம் 28,975 பொது மக்கள் 7,252 முன்கள பணியாளர்களிடம் இந்த நான்காவது சர்வே எடுக்கப்பட்டது.

வாய்ப்பு உள்ளதா?
பொதுவாக ஹெர்ட் இம்மியூனிட்டி என்பது பொது மக்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஒரு நோயால் பாதிக்கப்பட்டால் ஏற்பட கூடியது. 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களிடம் ஆண்டிபாடி இருக்கும், இதனால் அந்த நோய் மேலும் பரவுவது தடுக்கப்பட்டு சங்கிலி உடைக்கப்படும். ஆனால் கொரோனாவில் ஹெர்ட் இம்மியூனிட்டி அவ்வளவு எளிதில் சாத்தியம் இல்லை.

சிக்கல்
கொரோனா பல உருமாறிய வகையாக பரவி வருகிறது. பல வேரியண்ட்கள் உருவாகிவிட்டது. இதனால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர் மீண்டும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு வகையான கொரோனா தாக்கி ஆண்டிபாடி பெற்றவருக்கு வேறு வகையான கொரோனா தாக்கும் ஆபத்துகள் உள்ளன. இதனால் 70 சதவீதம் பேருக்கு மேலும் ஆண்டிபாடி பெற்றாலும் கூட ஹெர்ட் இம்மியூனிட்டியை கொரோனாவிற்கு எதிராக பெறுவது சாத்தியம் இல்லை என்கிறார்கள் ஐசிஎம்ஆர் வல்லுனர்கள்.












Click it and Unblock the Notifications