உட்கட்சி விவகாரங்களில் ஆளுநர்கள் தலையிட கூடாது: சிவசேனா வழக்கிலும் டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்!
டெல்லி: மாநிலங்களி அரசியல் கட்சிகளின் உட்கட்சி விவகாரங்களில் ஆளுநர்கள் தலையிடக் கூடாது; சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பை வைத்து ஒரு கட்சியில் யாருக்கு பெரும்பான்மை என்பதை தீர்மானிக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்த, தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களை அப்போதைய முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு தகுதி நீக்கம் செய்தது. இந்த தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வந்தது. தற்போது இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சிவசேனா யாருக்கு என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.

அதேநேரத்தில் இந்த 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் பல முக்கியமான கருத்துகளை முன்வைத்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவை:
- உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் உத்தரவிட்டதற்கு எந்த முகாந்திரமும் இல்லை
- ஒரு அரசியல் கட்சியின் சட்டசபை கொறாடாவை அந்த அரசியல் கட்சிதான் நியமிக்க வேண்டும்; சட்டசபை குழு ஒன்று அரசியல் கட்சி கொறடாவை நியமிக்க முடியாது; மகாராஷ்டிராவில் ஷிண்டே தரப்பு நியமித்த கொறடாவை ஆளுநர் தரப்பு ஏற்றது சட்டவிரோதமானது.
- ஒரு கட்சியில் யார் பெரும்பான்மை என்பதை சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பை வைத்து முடிவு எடுக்க முடியாது.
- சிவசேனா கட்சிக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே இருதரப்புமே உரிமை கோர இயலாது.
- ஏக்நாத் ஷிண்டே உட்பட16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு மாற்றி உத்தரவு

- உட்கட்சி விவகாரங்களில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை
- சிவசேனா யாருக்கு சொந்தமானது என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்.
- உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை தாமாகவே ராஜினாமா செய்தார்; அதனால் ஷிண்டேவை ஆளுநர் முதல்வராக பதவியேற்க அழைத்தார். அதில் தவறு இல்லை.
- உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்துவிட்டதால் முந்தைய ஆட்சியை மீண்டும் அமைக்குமாறு உத்தரவிட முடியாது.
- ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டது தவறு; ஏக்நாத் ஷிண்டே தரப்பு கொறடாவை ஆளுநர் அங்கீகரித்ததும் தவறு.
- உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யாமல் இருந்தால் மீண்டும் அவரது ஆட்சி தொடர உத்தரவிட்டிருப்போம்.
இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தில் டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமே இல்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், மாநில அமைச்சரவைக்குதான் அதிகாரம் உண்டு என திட்டவட்டமாக மற்றொரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிவசேனா வழக்கிலும் உட்கட்சி விவகாரங்களில் ஆளுநர்கள் தலையிடக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications