"கேலிக்கூத்து!" சிவசேனா எம்எல்ஏக்கள் தகுதிநீக்க மனு! மகாராஷ்டிரா சபாநாயகரை எச்சரித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சிவசேனா எம்எல்ஏக்கள் தொடர்பான தகுதி நீக்க மனுக்கள் விவகாரத்தில் சாபநாயகரின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்தாண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே கலகம் செய்தார். ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்ல்ஏக்கள் பாஜகவுடன் கை கோர்த்தனர்.

அதைத் தொடர்ந்து பாஜக- ஷிண்டே சிவசேனா இணைந்து ஆட்சியை அமைத்தது. மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். அப்போது ஒருங்கிணைந்த சிவசேனா கட்சியின் தலைமை கொறடா சுனில் பிரபு, ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க மனுவைச் சபாநாயகரிடம் சமர்ப்பித்தார்.
சிவசேனா: அதேபோல ஷிண்டே கோஷ்டியும் தாக்கரே எம்எல்ஏக்களுக்கு எதிராகத் தகுதி நீக்க மனுக்களை அளித்தது. இது தொடர்பாக சிவசேனா தரப்பினர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இந்த விவகாரத்தில் விசாரணை செய்ய மகாராஷ்டிரா சபாநாயகர் நீண்ட அட்டவணையை அறிவித்தார். இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதில் சபாநாயகர் வேண்டும் என்றே தாமதம் செய்து வருவதாக உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகர் மிக நீண்ட அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. சபாநாயகர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த சுனில் பிரபு என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபாநாயகர் செயல்பாடுகளைக் கண்டித்தது.
உச்ச நீதிமன்றம்: அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக இந்த விவகாரத்தைச் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தைப் பயனற்றதாக மாற்றக்கூடாது என்றும் விமர்சித்தார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகினர். தகுதி நீக்கம் தொடர்பான விசாரணைக்கு மகாராஷ்டிர சபாநாயகர் ஓராண்டிற்குக் காலக்கெடுவை வகுத்துள்ளதாக முறையிட்டனர்.
சிவில் வழக்கைப் போல இந்த விவகாரத்தில் சபாநாயகர் அட்டவணையை வெளியிட்டுள்ளதாகக் கூறிய கபில் சிபல், பத்தாவது அட்டவணையின் கீழ் உள்ள நடவடிக்கைகள் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார். சபாநாயகர் அறிவித்துள்ள அட்டவணை குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்து, யாராவது சபாநாயகருக்கு அறிவுரை சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவரால் முறியடிக்க முடியாது.
அதிருப்தி: அவர் என்ன மாதிரியான அட்டவணையைப் பரிந்துரைக்கிறார்? இது ஒரு சுருக்கமான நடைமுறை. அட்டவணையை வகுப்பது காலவரையின்றி விசாரணையைத் தாமதப்படுத்த இல்லை. எனவே, இவர்களின் அச்சம் சரியானதுதான். இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளார் என்பது போல அவர் நடந்து கொள்ள வேண்டும். ஜூன் மாதம் முதல் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை இதை ஒரு கேலிக்கூத்தாக மாற்ற முடியாது. விசாரணை முறையாக நடக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
அப்போது பத்தாவது அட்டவணையின் கீழ் சபாநாயகர் அதிகாரத்தைப் பயன்படுத்தும் நிலையில், அதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியுமா என மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு சுப்ரீம் கோர்ட், தீர்ப்பாயம் என்ற முறையில், சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவர்தான் என்றனர்.
ஒத்திவைப்பு: ஷிண்டே கோஷ்டி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறி சபாநாயகர் முடிவெடுப்பதில் காலதாமதம் செய்தால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அடுத்த தேர்தலுக்கு முன்பு இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் அக். 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications