கோவிஷீல்டு கால இடைவெளி.. மீண்டும் மாற்றும் மத்திய அரசு.. என்ன காரணம்? அதிமுக்கிய தகவல்
டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு வேக்சின் தற்போது 12 முதல் 16 வாரக் கால இடைவெளியில் செலுத்தப்படும் நிலையில், அதை மீண்டும் மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய சூழலில் கொரோனா வேக்சின் மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து நாடுகளும் கொரோனா வேக்சின் பணிகளை அதி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது.

வேக்சின் பணிகள்
இந்தியாவில் இதுவரை 5 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும். பெரும்பாலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளைக் கொண்டே வேக்சின் பணிகள் நடைபெறுகின்றன. இதில் கோவாக்சினஅ 4 முதல் 6 வார கால இடைவெளியில் செலுத்தப்படுகின்றன. ஆனால், கோவிஷீல்டு வேக்சின் கால இடைவெளி தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. முதலில் கோவிஷீல்டு 4 முதல் 6 வாரக் கால இடைவெளியில் அளிக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இரண்டு டோஸ் கால இடைவெளி 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது.

கால இடைவெளி அதிகரிப்பு
அதன் பின்னரே மாநிலத்தில் கொரோனா 2ஆம் அலை உச்சம் பெற்றது. வேக்சின் உற்பத்தியும் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என்பதால், பல்வேறு இடங்களில் வேக்சின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதையடுத்து கோவிஷீல்டு 2 டோஸ் கால இடைவெளி 12 முதல் 16 வாரங்களாக மாற்றியமைக்கப்பட்டு மத்திய அரசு கடந்த மே 13ஆம் தேதி உத்தரவிட்டது. தடுப்பூசி தட்டுப்பாட்டை மறைக்கவே வேக்சின் கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்துள்ளதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இருப்பினும், 2 டோஸ்களின் கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் தடுப்பாற்றல் அதிகரிப்பதாக மருத்துவ வல்லுநர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

மத்திய அரசு
இந்தியா 2 டோஸ் கால இடைவெளியை அதிகரித்த அதே நேரம் பிரிட்டன், 2 டோஸ் கால இடைவெளியைக் குறைத்தது. டெல்டா கொரோனாவை கட்டுப்படுத்த குறைந்த விரைவாக ஒருவருக்கு இரண்டு டோஸ் வேக்சினை அளிக்க வேண்டும் எனப் பிரிட்டன் ஆய்வாளர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று அந்நாட்டு அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்த நேரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வேக்சின் கால இடைவெளியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதை மறுத்த கோவிட் சிறப்புக் குழு தலைவர் என் கே அரோரா, வேக்சின் தடுப்பாாற்றல் குறித்து இருக்கும் தரவுகளை ஆராய்ந்து வருவதாகவும் 2 டோஸ் இடைவெளியைக் குறைக்க எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

பிரிட்டன் ஆய்வு
பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற ஆய்வில் கொரோனா வேக்சின் கால இடைவெளிக்கும் அதன் தடுப்பாற்றலுக்கும் பெரியளவில் தொடர்பில்லை எனத் தெரிய வந்தது. அதேநேரம் புதிய உருமாறிய கொரோனா வகைகள் ஒரு டோஸ் வேக்சினுக்கு கட்டுப்படுவதில்லை. எனவே புதிய உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த எவ்வளவு விரைவில் முடியுமே அவ்வளவு விரைவாக ஒருவருக்கு 2 டோஸ் வேக்சின் போட வேண்டும் என்று அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல கொல்கத்தாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவரும் உருமாறிய கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு இந்தியா வேக்சின் கால இடைவெளியைக் குறைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தார்.

விரைவில் மீண்டும் மாற்றியமைப்பு
கொரோனா வேக்சின் கால இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனியார் மையங்களில் கொரோனா தடுப்பூசி கால இடைவெளியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் விரைவில் வேக்சின் டோஸ் கால இடைவெளியைக் குறைப்பது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications