பண மோசடி சட்டம், ஒருவரை சிறையில் தள்ளும் கருவி இல்லை.. ED-க்கு உச்சநீதிமன்றம் வைத்த செக்
டெல்லி: சுமார் 15 மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறது. ஒருவரைச் சிறையில் அடைக்க பிஎம்எல்ஏ எனப்படும் பணமோசடி தடுப்புச் சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
போக்குவரத்துத் துறையில் அமைச்சராக இருந்த போது அரசு வேலை தர லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

செந்தில் பாலாஜி: சுமார் 15 மாதங்கள் சிறையிலேயே இருந்த அவருக்கு நேற்று தான் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. அப்போது உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்தது. அமலாக்கத் துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது. நீண்ட நாட்களுக்கு ஒருவரைச் சிறையில் வைத்திருக்க இந்த சட்டம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து கூறியது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இருப்பதை ஒப்புக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஆனால் விசாரணை முடிவது போலத் தெரியவில்லை என்றும் இப்படி காரணமே இல்லாமல் ஒருவரைச் சிறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே ஜாமீன் வழங்கியது.
முக்கிய கருத்து: இந்த தீர்ப்பின் போது சுப்ரீம் கோர்ட் கூறிய சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஜாமீன் உத்தரவின் போது நீதிபதிகள் ஏஎஸ் ஓகா மற்றும் ஏஜி மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, "நியாயமான காலத்திற்குள் விசாரணை முடிவடைய வாய்ப்பில்லாத போது, ஒருவரை நீண்ட காலம் சிறையில் அடைக்க, அமலாக்கத் துறை கைகளில் பிரிவு 45(1)(ii) போன்ற விதிகள் கருவிகளாக உள்ளன. இதை நீதிமன்றங்களால் அனுமதிக்க முடியாது" என்றனர்.
அதாவது இந்த பிஎம்எல்ஏ விதிகளின் கீழ் கைதாகும் நபர் குற்றவாளி அல்ல என்றும், ஜாமீனில் வழங்கப்பட்டால் மீண்டும் குற்றத்தைச் செய்ய வாய்ப்பில்லை என்றும் நீதிமன்றங்கள் முடிவெடுக்க வேண்டும். இருப்பினும், இந்த கடுமையான விதிகளை வைத்து ஒருவரை நீண்ட காவலில் வைக்கப்படக் கூடாது என்றும் எச்சரித்த நீதிமன்றம், இது குறித்து கவலையை வெளிப்படுத்தியது.
நியாயமற்ற காலம்: இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறுகையில், "பிஎம்எல்ஏவின் பிரிவு 45(1)(iii)ல் ஜாமீன் வழங்குவது குறித்து கடுமையான விதிகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களை நியாயமற்ற முறையில் நீண்ட காலத்திற்கு விசாரணையின்றி சிறையில் அடைக்கப் பயன்படும் கருவியாக இதை பயன்படுத்தக்கூடாது. இந்த விதிகளால் ஒருவர் தனது தனிமனித சுதந்திரத்தைக் காலவரையின்றி இழக்கக் கூடாது. இந்தியாவின் நீதித்துறையைப் பொறுத்தவரை இங்கு ஜாமீன் என்பதே விதி.. சிறை என்பது விதிவிலக்கு மட்டுமே" என்று மிகத் தெளிவாக கூறியது.
பண மோசடி சட்டம்: பண மோசடி தடுப்பு சட்டத்தில் உள்ள சில விதிகள், குறிப்பாகச் சம்மன், கைது, சோதனை மற்றும் பறிமுதல் தொடர்பான மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அமலாக்கத் துறையின் அதிகாரிகள் தொடர்பாக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் இப்போது வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நமது நாட்டின் அரசியலமைப்பின் 21வது பிரிவு வழங்கும் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் சட்டங்களையே ஆயுதமாக்குவது தொடர்பாக இப்போது பலரும் கவலை எழுப்பும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்த அடிப்படை உரிமைகளுக்கு உறுதி செய்வதாகவே உள்ளது.
தண்டைக்கு இணையாகக் காவல்: சுப்ரீம் கோர்ட் மேலும் கூறுகையில், "நியாயமான நேரத்தில் விசாரணை முடிவடைய வாய்ப்பில்லாத நேரங்களில், கடுமையான விதிகள் கரைந்துவிடும்.. மேலும் இந்த சிறைவாசமே பரிந்துரைக்கப்பட்ட தண்டனையின் கணிசமான பகுதியை மீறிவிட்டது" என்றனர். அதாவது பணமோசடி குற்றங்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்க முடியும். அப்படி இருக்கும் போது ஒருவரை நீண்ட நாட்கள் காவலில் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிடும் என்று நீதிமன்றம் கூறுகிறது.
மேலும் இறுதியாக, "குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பல ஆண்டுகளாகச் சிறையில் இருந்து, இறுதியில் விடுவிக்கப்பட்ட வழக்குகள் உள்ளன. இதுபோன்ற வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டோர் இறுதியில் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டுகளை அவர்கள் இழந்துவிடுகிறார்கள்" என்றும் கூறியது.












Click it and Unblock the Notifications