‛குழப்பம் ஏற்படுமே’.. புதிய தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம்
டெல்லி: புதிய சட்டத்தில் 2 தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது. அதோடு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் குழப்பம் ஏற்படலாம் எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்ததோடு, தேர்தல் ஆணையர் நியமன நடவடிக்கைக்கு தடையை போட மறுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தியாவில் சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல், ராஜ்யசபா தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தான் அறிவித்து நடத்தி வருகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்கள் இருப்பார்கள்.

இப்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார்.தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே பிப்ரவரியில் ஓய்வு பெற்றார். இன்னொரு தேர்தல் ஆணையர் அருண் கோயல் கடந்த 9ம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். லோக்சபா தேர்தல் சமயத்தில் 2 தேர்தல் ஆணையர்களின் பணியிடங்கள் காலியாக இருந்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டப்படி 2 தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை குழு ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோரை தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்தது. இவர்கள் பொறுப்பேற்ற நிலையில் லோக்சபா தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தேர்தல் ஆணையர் நியமிக்கும் குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருப்பார். ஆனால் மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி அவருக்கு அந்த குழுவில் இடமில்லை. இந்நிலையில் தான் புதிய சட்டத்தில் தேர்தல் ஆணையர் நியமன நடவடிக்கைக்கு தடைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஜெயா தாக்குர் மற்றும் ஜனநாயக சீர்த்திருத்த தங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசு சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‛‛மனுதாரர்கள் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவில் உள்ளனர். இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் வேளையில் சர்ச்சை, குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஆணையர்களின் தகுதி குறித்து ஆட்சேபம் தெரிவிக்கவும் மனுதாரர் தவறிவிட்டனர்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய சட்டப்படி தேர்தல் ஆணையர் நியமனம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது எனக்கூறியது. அதோடு புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் குறித்து வெ்வித புகார்களும் இல்லையே? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதுமட்டுமின்றி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் விளைவுகள் ஏற்படலாம். தற்போதைய நிலையில் இடைக்கால தடை விதித்தால் பெரும் குழப்பம் ஏற்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததோடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications