லோக்சபா தேர்தல் நேரத்தில் பரபரப்பு.. ரபேல் சீராய்வு வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது புதன்கிழமை (நாளை) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்திய விமானப்படையில் சேர்க்கும் நோக்கத்தில், பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு 2016ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.
இந்த ஒப்பந்தத்தில், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ததில் இருந்து, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் பாலியல் புகார்.. 3 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
நீதிமன்றத்தில் வழக்குகள்
இந்த நிலையில் ரபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, கோர்ட்டு மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சி தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோர் வழக்குகளை தாக்கல் செய்தனர்.
விசாரணை
6வதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஒரு வழக்கு தாக்கல் செய்து, ரபேல் போர் விமான பேரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே. கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
முறைகேடு நடக்கவில்லை
அனைத்து தரப்பு வாத, விவாதங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்றம், கடந்த வருடம் டிசம்பர் 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை என கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
சீராய்வு மனு
இதை எதிர்த்து, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின்போது, ஊடகத்தில் வெளியான ரபேல் ஆவணம் என சொல்லப்படும் காகிதங்களை நீதிமன்றம் ஆதாரமாக எடுக்க கூடாது என்று, மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். ரகசிய காப்பு சட்டத்தின்கீழ், பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார். ஆனால் ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிகள் அமர்வோ, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், ஊழல், மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகாராக இருந்தால், பாதுகாப்பு அமைச்சகம் போன்ற துறைகளில் உள்ள ஆவணங்களையும் வெளியிட முடியுமே என வினவினர்.
நாளை தீர்ப்பு
வாத, விவாதங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்றம், கடந்த மார்ச் 14ம் தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் சீராய்வு மனு மீதான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. முதல்கட்ட லோக்சபா தேர்தல் 11ம் தேதி துவங்க உள்ள நிலையில், ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்க உள்ள தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.