ராஜஸ்தான், ம.பியில் முதல்வர் யார்? முடிவு எடுக்க திணறும் பாஜக? லாபி செய்யும் தலைவர்கள்! நடப்பது என்ன
டெல்லி: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையிலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் முதல்வர் யார் என்று முடிவு செய்ய முடியாமல் பாஜக மேலிடம் திணறி வருகிறார். அந்த மாநிலங்களில் சீனியர் தலைவர்கள் டெல்லி மேலிடத்தில் லாபி செய்து வருவதால் கட்சி மேலிடம் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
கடந்த நவம்பர் மாதத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கனா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தெலுங்கனாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. மிசோரம் மாநிலத்தில் சோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியை பிடித்தது. ஏனைய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.

ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜக, ஆட்சியை பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒருவாரம் ஆகியும் வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் பாஜக தலைமை திணறி வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின் இன்று சத்தீஷ்கரில் முதல்வரை பாஜக மேலிடம் அறிவித்தது. எனினும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிக்கிறது.
ஜோதிராதித்யா சிந்தியா: மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்தார். பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், மீண்டும் முதல்வர் பதவி அவருக்கே வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. ஏனெனில், எம்.பி பதவியை ராஜினாமா செய்த நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், உள்ளிட்டோர் முதல்வர் பதவியை கைப்பற்ற கவனமாக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்காக கட்சியின் மேலிடத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் லாபி செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களை தவிர மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார். குவாலியர், சம்பல் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை நிரூபித்து இருகும் ஜோதிராதித்யா சிந்தியா முதல்வர் பதவிக்கான ரேசில் உள்ளார் என்று தெரிகிறது.
வசுந்தர ராஜே சிந்தியா: இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் நாளை மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய பிரதேசத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்து விடும். இன்னொரு பக்கம் ராஜஸ்தான் மாநிலத்திலும் இதே நிலைதான் உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 69 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு இப்போது முதல்வரை தேர்வு செய்வது அவ்வளவு ஈசியான வேலையாக இல்லை. ஏனெனில், பாஜக மேலிடம் வசுந்தர ராஜே சிந்தியாவை முதல்வராக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில், வசுந்தர ராஜே சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படுவார் என்பதால் பாஜக மேலிடம் வேறு ஒருவரை தேர்வு செய்ய முனைப்பு காட்டுவதாக சொல்லப்படுகிறது.
பரபரப்பு: அதாவது சாமியார் பாலக்நாத்தை முதல்வராக்கவே பாஜக மேலிடம் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் வசுந்தராஜா ராஜே சிந்தியா முதல்வர் பதவியை விட்டு விடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் என்றால் வசுந்தராஜா ராஜேவுக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் திடீரென ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் இன்று வசுந்தர ராஜே சிந்தியா வீட்டுக்கு அடுத்தடுத்து படையெடுத்தனர். இதனால், ராஜஸ்தான் அரசியலில் தேர்தல் முடிந்து ஒருவாரம் ஆகியும் பரபரப்பு அடங்கிய பாடில்லை. இதுபோக ராஜ்யவர்த்தன்சிங் ரத்தோர், தியா குமாரி ஆகியோரது பெயரும் முதல்வருக்கான ரேசில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
எம்.எல்.ஏக்கள் கூட்டம்: முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் மூத்த தலைவர்களுக்குள் போட்டா போட்டி நிலவி வரும் நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ராஜஸ்தானில் முகாமிட்டுள்ளார். நாளை மறுநாள் 12ம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் இரண்டு முறை முதல்வராக பதவி வகித்த வசுந்தராராஜேவுக்கே முதல்வர் பதவி கிடைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications