கோவை & மதுரை மெட்ரோ தாமதம் ஏன்? "முக்கிய ரிப்போர்ட் தர தவறிய தமிழக அரசு.." மத்திய அரசு விளக்கம்
டெல்லி: சென்னையில் இருக்கும் மெட்ரோ ரயிலுக்கான வரவேற்பு மிகச் சிறப்பாக இருக்கிறது. இதனால் கோவை, மதுரை நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இருப்பினும், இதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே கோவை, மதுரை மெட்ரோ தொடர்பாக மத்திய அரசு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
சென்னையில் இப்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஏசி பயணம், டிராபிக் தொல்லை இல்லை, சரியான நேரத்திற்குச் செல்ல முடிவது உள்ளிட்ட காரணங்களால் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இதையடுத்து சென்னையிலும் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. மாதவரம் - சிறுசேரி, பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் - சோழிங்கநல்லூர் என்று மொத்தம் 3 ரூட்களில் மெட்ரோ பணிகள் இப்போது நடந்து வருகிறது.
மெட்ரோ: டிராபிக்கை குறைப்பதில் மெட்ரோவுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதால் மெட்ரோவை மற்ற நகரங்களிலும் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. கோவை, மதுரை மற்றும் திருச்சி நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைக் கொண்டு வர முடிவு செய்த தமிழக அரசு இது குறித்த அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும் உருவாக்கப்பட்ட மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதற்கிடையே கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து சில முக்கிய தகவல்களை மத்திய அரசு பகிர்ந்துள்ளது.
கோவை மற்றும் மதுரை மெட்ரோ: அதாவது கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான மொபிலிட்டி திட்டம் மற்றும் மாற்றுப் பகுப்பாய்வு அறிக்கையைத் தமிழக அரசு இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டோகன் சாஹு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மெட்ரோ திட்டங்களுக்கு இந்த இரண்டு ரிப்போர்ட்டையும் மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
திமுகவின் ராஜ்யசபா எம்பி பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டோகன் சாஹு இந்த பதிலை அளித்தார்.
கேள்வி: அதாவது மதுரை, கோவை மற்றும் திருச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் பொது முதலீட்டு வாரியத்தின் பரிசீலனைக்காக வைக்கப்பட்டுள்ளதா என்று திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பினார். அவை பொது முதலீட்டு வாரியத்திற்கு அனுப்பவில்லை என்றால்.. இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும் திமுக எம்பி வில்சன் கோரிக்கை விடுத்தார்.
பதில்: இதற்குப் பதிலளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் டோகன் சாஹு, "கடந்த 2017இல் கொண்டு வரப்பட்ட மெட்ரோ ரயில் கொள்கையின்படி, எந்தவொரு நகரத்திலும் மெட்ரோ ரயிலைத் திட்டமிடுவதற்கு சிஎம்பி எனப்படும் விரிவான மொபிலிட்டி திட்ட அறிக்கை மற்றும் மாற்றுப் பகுப்பாய்வு அறிக்கை ஆகியவை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உள்ளன.
ஆனால், கோவை மற்றும் மதுரை மெட்ரோவுக்கான டிபிஆர் எனப்படும் விரிவான திட்ட அறிக்கையை மட்டும் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ளது. இன்னும். சிஎம்பி அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை" என்று அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications