மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ்! மத்திய அமைச்சரை சந்தித்த பிறகு தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டம்!
டெல்லி: மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் புதிய மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பது, உலகத் தரத்தில் போதைப்பொருள் மீட்பு மறுவாழ்வு அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை சந்தித்து பேசிய பின் அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
இதனிடையே ஒப்பந்தப் பணிகள் எடுத்த நிறுவனத்தின் கால தாமதத்தால் எய்ம்ஸ் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழிசை விளக்கம் அளித்திருக்கிறார்.

மத்திய அமைச்சருடன் சந்திப்பு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை சந்தித்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரியில் புதிய மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பது, உலகத் தரத்தில் போதைப்பொருள் மீட்பு மறுவாழ்வு அமைப்பது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதேபோல் புதுச்சேரி மருத்துவமனைகளை தரம் உயர்த்துவது பற்றியும் பேசியிருக்கிறார். அப்போது மதுரை எய்ம்ஸ் குறித்த பேச்சும் நடந்திருக்கிறது.

தமிழில் மருத்துவ பாடத்திட்டம்
இதேபோல் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழில் மொழி பெயர்ப்பதற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தர வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியாவை தமிழிசை கேட்டுக்கொண்டார். இதன் பிறகு செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு தமிழிசை அளித்த பேட்டியில், மதுரையில் மிக விரைவில் எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படும் என்ற உறுதியை அளித்தார். மேலும், ஒப்பந்தப் பணிகள் எடுத்த நிறுவனத்தின் கால தாமதத்தால் தான் எய்ம்ஸ் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழிசை விளக்கம் அளித்திருக்கிறார்.

எய்ம்ஸ் பணிகள்
தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதை வைத்து பார்த்தால் இம்மாத இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால் அதற்குள் பணிகளை முடிக்க முடியாவிட்டாலும் கூட குறிப்பிட்ட சதவீதமாவது பணிகளை நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் எய்ம்ஸ் விவகாரம் மீண்டும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

தமிழகத்திற்காக பேச்சு
தமது நிர்வாகத்தின் கீழ் வரும் புதுச்சேரி சார்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டங்கள் பற்றி மட்டும் பேசாமல் தாய் மண்ணான தமிழகத்திற்காகவும் மத்திய அமைச்சரிடம் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்து பேசியிருப்பது பாராட்டத்தக்கது.












Click it and Unblock the Notifications