21 வயது பெண்ணுக்கு ஜிம்முக்குள் நடந்த கொடுமை.. 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. டெல்லியில் அதிர்ச்சி
டெல்லி: தலைநகர் டெல்லியில் உடற்பயிற்சிக் கூடத்தில் 21 வயது பெண் ஒருவரை கொடூரமாகத் தாக்கி மிரட்டி 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த வியாழக்கிழமை மாலை தொழிற்சாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அந்த பெண்ணை சில மணி நேரங்களுக்குப் பிறகு தொடர்பு கொண்ட ஆலையின் முதலாளி தனது நண்பரின் உடற்பயிற்சி கூடத்திற்கு சுத்தம் செய்ய வேண்டும் என வரவழைத்துள்ளார்.
இதையடுத்து அந்தப் பெண் புத்த விகார் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்றபோது ஆலையின் உரிமையாளர், உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளர் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் இருப்பது தெரிய வந்தது. அப்போது அவர் வெளியே செல்ல முயற்சித்த நிலையில் மூவரும் கதவை பூட்டிக்கொண்டு இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
ஓ.பி.எஸ்.க்கு வெற்றிலை மாலை சூடிய ஆர்.பி.உதயகுமார்! பெரியகுளத்தில் குவிந்த தென்மாவட்ட நிர்வாகிகள்!
பாலியல் வன்கொடுமை
மேலும் இங்கிருந்து தப்ப முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என அந்த பெண்ணை மிரட்டியதோடு மூன்று பேரும் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். எவ்வளவோ கெஞ்சியும் அப்பெண்ணை அவர்கள் விடாத நிலையில் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு பிறகு அவரை விடுவித்தனர்.
கொலை செய்வதாக மிரட்டல்
இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் தன் கணவரிடம் கூறியதையடுத்து வியாழக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் தனது முதலாளி மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் தன்னை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். மேலும் இது குறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் குற்றம் சாட்டினார்.
போலீசார் வழக்குப்பதிவு
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376பி, 509, 323 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் கூட்டு பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆலை உரிமையாளர் மற்றும் பெண் பணிபுரியும் தொழிற்சாலையின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.
வன்கொடுமை சம்பவத்தால் அதிர்ச்சி
மேலும் தலைமறைவாக உள்ள 17 வயது சிறுவனையும் தேடி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இளம்பெண் ஒருவர் தன் பணியாற்றும் ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது