2000 ரூபாய் நோட்டு அறிவிப்பு.. சில நிமிடங்களில் முடங்கிய ஆர்பிஐ வெப்சைட்
டெல்லி: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக அறிவித்த சில நிமிடங்களில் ரிசர்வ் வங்கியின் இணையதளம் முடங்கியது. அதிகப்படியாக மக்கள் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல முயன்றதால் இணையதளம் செயலிழந்துள்ளது.
ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, வரும் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் டெபாசிட் செய்து 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வமாக அவை செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். தேவைப்படுகிற அளவில் பிற மதிப்புகளில் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் " என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள 89 சதவீத 2000 ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 2017ல் வெளியிடப்பபட்டன. மார்ச் 2018ன் படி 6.73 லட்சம் கோடி ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. அதாவது 37.3 சதவீதம் என்கிற அளவில் புழக்கம் இருந்தன. ஆனால் 2023 மார்ச் 31ன் படி 3.62 லட்சம் கோடி ரூபாய் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கிறது.
2000 ரூபாய் நோட்டுக்களை ஒரே நேரத்தில் 2000 ஆயிரம் அளவிற்கு கொடுத்து 500 ரூபாய் அல்லது 200 அல்லது 100 ரூபாய் என எக்ஸேஎன்ஞ்ச் செய்து கொள்ளலாம் என்றும், வரும் மே 23ம் தேதி முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளைகளிலும் இது நடைமுறைக்கு வருகிறது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நிமிடங்களிலேயே ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு ஏராளமான மக்கள் வந்தனர். ஊடகங்களில் வந்த செய்தி உண்மை தானா என்று பார்ப்பதற்காக வந்தவர்களால், ரிசர்வ் வங்கியின் இணையதளமே செயல் இழந்தது.

ஆர்பிஐ இணையதளமே முடங்கி காணப்படுவதால் யாரும் உள்ளே சென்று செய்தி உண்மை தானா என்பதை அறிய முடியாமல் தவிக்கிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஆர்பிஐ வெப்சைட்ட பார்க்க நினைப்பதால் முடங்கி உள்ளதாக தெரிகிறது. விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த செய்தியின் கீழ் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப்பில் அறியலாம்.












Click it and Unblock the Notifications