தென்பெண்னையாறு நதி நீர் பங்கீடு: தீர்ப்பாயம் அமைக்க மேலும் ஒரு மாதம் மத்திய அரசு அவகாசம் கேட்பு
டெல்லி: தென்பெண்ணையாறு நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு- கர்நாடகா இடையே நதி நீர் பிரச்சினையில் காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. காவிரியை தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யர்கோல் என்னும் இடத்தில் அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடகா அரசு மேற்கொண்டது. கர்நாடகாவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கையை தடுக்க கோரியும் தென்பெண்ணை நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க வலியுறுத்தியும் 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசை அணுக வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் முதலில் அறிவுறுத்தியது. இதனால் மத்திய அரசிடம் தென்பெண்ணை நடுவர் மன்றம் அமைக்க கோரியது தமிழ்நாடு அரசு. ஆனால் மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாத நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியது தமிழ்நாடு. இதன்பின்னர் 2 ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய நதி நீர் ஆணையமானது நடுவர் மன்றம் குறித்து முடிவெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் தற்போது புதிய முன்னேற்றமாக, தென்பெண்ணை நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மத்திய அரசு தெரிவித்ததது.
மேலும் கர்நாடகா தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த தீர்ப்பாயம் அமைக்க கால அவகாசம் மத்திய அரசு கோரியது. ஆனால் மத்திய அரசுக்கு கால அவகாசம் தரக் கூடாது என தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களுக்குப் பின்னர், தென்பெண்ணையாறு நதிநீர் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 2 மாதம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
இந்தநிலையில், தென்பெண்ணையாறு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசு மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தீர்ப்பாயம் குறித்து இறுதி முடிவெடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதுவரை முடிவெடுக்கப்படாததால் கூடுதலாக ஒரு மாத அவகாசம் தரவும் கோரி பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications