செப்.30-க்கும் பிறகு 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கி ஆளுநர் மேஜர் அப்டேட்
டெல்லி: 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். மூன்று மாதங்கள் அவகாசம் உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000-ம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு புதிதாக ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்து குறைந்து வந்ததை காண முடிந்தது.

கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே ஏடிஎம்களில் இருந்து ரூ.2,000 நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோல், 2,000 ரூபாய் நோட்டு அச்சிடுவதே 2018-19-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், மக்கள் மத்தியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஏதோ ஒன்றிரண்டு தாள்களை எப்போதாவது அரிதாக காண முடிந்ததே தவிர பெரும்பாலான தாள்கள் எங்கே சென்றது கூட என்று தெரியவில்லை.
குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து குறைந்ததை அப்பட்டமாக காட்டியது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 274 கோடி எண்ணிக்கையிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், 2021 மார்ச் மாதம் அந்த எண்ணிக்கை 245 கோடியாகவும், 2022 மார்ச் மாதம் 214 கோடியாகவும் குறைந்து இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இது புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 10.8 சதவீதம்தான் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தான் நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதாவது, புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மே 23 ஆம் தேதி முதல் திரும்ப பெறப்படும் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் தங்கள் கைகளில் சேமிப்பாக வைத்து இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேல் மாற்றிக்கொள்ள முடியாது. எனினும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள உச்ச வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த நிலையில், நாளை முதல் வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம், 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:- "2 ஆயிரம் நோட்டுக்களை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம். மூன்று மாதங்கள் அவகாசம் உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும். காலக்கெடு கொடுத்ததற்கான காரணமே மக்கள் இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு வங்கிகளில் கொடுத்து மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பணப்புழக்கத்தை ஈடு கட்டவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications