செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை நடத்தப்போவது மத்திய அரசா? மாநில அரசா?.. அமைச்சர் பதில் இதுதான்!
டெல்லி: செங்கல்பட்டில் செயல்படாமல் இருக்கும் கொரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு வாரத்தில்தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முடங்கிய நிறுவனம்
செங்கல்பட்டு மாவட்டம் திருமணி கிராமத்தில் எச்.எல்.எல்.பயோடெக்கின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த தடுப்பூசி பூங்கா சுமார் ரூ. 600 கோடி செலவில் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இங்கு 585 மில்லியன் டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியும். அனால் இதுவரை செயல்படாமல் முடங்கியுள்ளது.

குத்தகைக்கு அளியுங்கள்
செயல்படாமல் இருக்கும் இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். இங்கு தடுப்பூசியை உறபத்தியை மீண்டும் தொடங்கலாமா? எத்தனை தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும்? இதற்கான பணிகள் தொடங்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த தடுப்பூசி நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

மத்திய அமைச்சருடன் சந்திப்பு
இந்த நிலையில் தடுப்பூசி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க.வின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு ஆகியோர் டெல்லியில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார்கள்.

ஒரு வாரத்தில் முடிவு
பின்னர் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பாலு ஆகியோர் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:- செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி மையம் தொடர்பாக ஒரு வாரத்தில் பதில் அளிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இங்கு விரைவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும். தடுப்பூசி மையத்தை நடத்தப்போவது மத்திய அரசா? மாநில அரசா? என்பது ஒரு வாரத்தில் தெரியவரும். தடுப்பூசித் தயாரிக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications