ஜனநாயகம் பற்றி மோடி பெருமையாக பேச.. மறுபுறம் எதிர்க்கட்சி எம்.பிக்களின் மைக் அணைப்பு.. சலசலப்பு!
டெல்லி: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பிரதமர் மோடி, இந்திய நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் பற்றி பெருமையாகப் பேசிய அதே நேரத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் மைக்குகள் அணைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. எதிர்க்கட்சி எம்.பிக்கள் இதுதொடர்பாக குரல் எழுப்பியதால் அவையில் சலசலப்பு எழுந்தது.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் 5 நாட்களுக்கு நடைபெறும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரின் அஜெண்டா என்ன என்பது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட இந்த சிறப்புக் கூட்டத்தொடரால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள், கேள்விகள் எழுந்தன.

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் பற்றி இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற செய்தி இதழில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவும் விவாதத்திற்கு பட்டியலிட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இந்தியாவில் ஜி 20 மாநாடு நடத்தி முடித்ததற்காகப் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும், பழைய கசப்பான விஷயங்களை மறந்து இந்த கூட்டத்தொடருக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பேசினார். தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "குஜராத் ரயில் நிலையத்தில் டீ விற்று, ரயில் நிலையத்தில் தூங்கிய ஒரு ஏழை, இந்த நாட்டின் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன். ஒரு ஏழை இந்த நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்பதை நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. ஒரு ஏழையும் எம்.பியாக முடியும் என்பதே நமது நாட்டின் ஜனநாயகத்தின் வலிமை. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும்." எனக் கூறினார்.
அதே சமயம், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக் அணைத்து வைக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். விலைவாசி உயர்வு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்களின் மைக் அணைத்து வைக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications