நாளை நான் சென்னையில் இருப்பேன்... பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட்
டெல்லி: பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், நாளை நான் சென்னையில் இருப்பேன் என்று அவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (பிப்.14) சென்னை வருகிறார். டெல்லியிலிருந்து தனி விமானம் வரும் பிரதமரை சென்னை விமான நிலையத்தில் காலை 10.35 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு காரில் செல்கிறார். அங்கு, அர்ஜுன் ரக பீரங்கியை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர், விரிவுபடுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சிகளில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் பிற்பகல் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் கேரளா செல்கிறார். அங்கும் பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், பிரமதர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது" என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications