டெல்லி கலவரம்.. எண்ணற்ற உயிர்களை காப்பாற்றிய இரு சவரத் தொழிலாளர்கள்.. என்ன செய்தார்கள் தெரியுமா?
டெல்லி: டெல்லியில் கலவரத்தின் போது காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களை முஸ்தபாபாத்தை சேர்ந்த இரு முடி திருத்தும் தொழிலாளிகள் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24 -ஆம் தேதி மதியம் 12 மணிக்கு டெல்லியில் ஜாபர்பாத், மவ்ஜ்பூர் உள்ளிட்ட இடங்களில் வன்முறை வெடித்தது. கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதும் தீ வைத்து கொளுத்தப்படுவதுமாக இருந்தது.
மேலும் இளைஞர்கள் பெரும்பாலானோர் கைகளில் இரும்பு கம்பிகள், கட்டைகளுடன் சென்று ஏராளமானோர் அடித்து உதைத்தனர். கண்மூடித்தனமாக இவர்கள் நடத்திய தாக்குதலில் 47 பேர் உயிரிழந்துவிட்டனர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஷாஜாத்
காயமடைந்தவர்கள் தலையில் ஏராளமான காயங்கள் இருந்தன. ரத்தம் சொட்ட ஏராளமானோர் அருகிலிருந்த அல் ஹிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பழைய முஸ்தபாபாத்தில் உள்ள ஷாஜாத்தை மருத்துவமனையில் உள்ள மருத்துவர் போன் செய்து மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து ஷாஜாத்தும் தனது நண்பர் வாசிம் என்பவரையும் அழைத்து சென்றார்.

காயமடைந்தவர்கள்
முடித்திருத்தும் தொழிலாளிகளான இருவரையும் மருத்துவர் உதவிக்காக அழைத்தார். ஆம் தலை முழுவதும் காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட வந்தவர்களுக்கு காயமுள்ள இடத்தில் முடியை அகற்றுவதற்காக அழைக்கப்பட்டனர். வன்முறை ஏற்பட்ட இடத்தில் அல் ஹிந்த் மருத்துவமனை மட்டுமே திறந்திருந்ததால் அங்கு காயமடைந்தவர்கள் குவியத் தொடங்கினர்.

தொழிலாளர்கள்
இவர்கள் இருவரும் ஏராளமானோருக்கு முடிகளை திருத்தி ரத்த காயங்களை துடைக்கும் பணிகளையும் செய்துள்ளனர். இவர்கள் உதவி செய்ததால்தான் மருத்துவர்களால் தாமதமின்றி சிகிச்சை அளித்தல், தையல் போடுதல் உள்ளிட்ட பணிகளை செய்ய முடிந்தது. இதுகுறித்து இரு தொழிலாளர்கள் கூறுகையில், டெல்லி வன்முறை ஏற்பட்டது என்பதை கேள்விப்பட்டோம். ஆனால் இந்த அளவுக்கு மோசமாக நடந்திருக்கிறது என்பதை மருத்துவமனையில்தான் தெரிந்து கொண்டோம்.

சிரமம்
அந்த மருத்துவமனையில் முதலில் நாங்கள் முடித்திருத்தம் செய்தவர், முஸ்தபாபாத்தை சேர்ந்த உள்ளூர்வாசி. அவரது தலையில் மர்மகும்பல் இரும்பு ராடால் தாக்கினர். தலை முழுவதும் ஆங்காங்கே காயம். ரத்தம் கொட்டியது. பிளேடை தலையில் வைக்கும் போது காயமடைந்த இடங்களில் படாமல் சுற்றியிருக்கும் இடங்களில் உள்ள முடியை நீக்குவது என்பது சிரமமாக இருந்தது. அதிலும் இதுவரை ரத்த களரியான முடித்திருத்தத்தை செய்ததே இல்லை.

கட்டு போட்டல்
அவரது தலையை சுத்தம் செய்தோம். பின்னர் முடிகளை நீக்கினோம். சந்த் பாக்கில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக இவர் சென்ற போது இதுபோல் தாக்கப்பட்டார். இந்த முதல் ஹேர்கட்டை நாங்கள் மறக்கவே மாட்டோம். நோயாளிகள் மருத்துவமனைக்கு காயங்களுடன் வர வர 3 மருத்துவர்கள், இரு செவிலியர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் நாங்கள் இருவரும் நோயாளிகளுக்கு முதலுதவி கொடுப்பது, காயங்களுக்கு கட்டு போடுவது உள்ளிட்ட பணிகளை செய்தோம் என்றனர்.

கட்டுப்பாடு
காயங்களுக்கு கட்டுப் போடுவது ஷாஜாத்துக்கு ஏற்கெனவே தெரியுமாம். அவர் வெரிகோஸ் வெயினால் ஏற்படும் காயங்களுக்கு மருந்து போடுவது கட்டு போடுவது உள்ளிட்ட அனுபவத்தால் கலவரத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய முடிந்தது. தங்களுக்கு கட்டுப்போட தெரியாவிட்டாலும் ஒரு மணி நேரத்தில் கற்றுக் கொள்ளலாம். இதெல்லாம் மனிதநேயம் என்றனர்.

ஆர்வம்
இதுகுறித்து அங்கிருந்த மருத்துவர் மீரஜ் ஏக்ராம் கூறுகையில் நாங்கள் அந்த இரு இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தோம். காயங்களுக்கு மருந்து போடுவது எப்படி, முதலுதவி செய்வது எப்படி, இதயத்தின் இயக்கத்தை தூண்டிவிடுவது எப்படி உள்ளிட்டவற்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தோம். அவர்களும் ஆர்வமுடன் கற்று கொண்டனர்.

இலவச மருந்துகள்
நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்ற இருவரும் எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். அன்றைய தினம் மட்டும் நான் வீட்டுக்கே போகாமல் 500 பேருக்கு சிகிச்சை அளித்தேன். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த கட்டணமும் வாங்கவில்லை. மருந்துகளுக்கும் கட்டணம் வாங்கவில்லை. ரூ 2 லட்சம் மதிப்பிலான மருந்துகளையும் அவர்களுக்கு இலவசமாகவே வழங்கினோம் என்றார்.












Click it and Unblock the Notifications