உதயநிதியின் அந்த வார்த்தையை கவனிச்சீங்களா? திமுகவின் வேலையே இதுதான்! நிர்மலா சீதாராமன் ‛அட்டாக்’
டெல்லி: சனாதன ஒழிப்பு மாநாட்டில் விவாதத்தை கிளப்பும் வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, மத்திய நிதி அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். அதோடு காங்கிரஸ், திமுகவையும் விடாமல் அவர் விளாசியுள்ளார்.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் இவர் சமீபத்தில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது பெரிய அளவில் இந்தியா முழுவதும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

அதாவது டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் உள்ளிட்டவற்றை எதிர்க்க முடியாது. இவற்றை ஒழிக்க தான் வேண்டும். அதேபோல் தான் சனாதனமும் என கூறினார். இவரது இந்த கருத்து என்பது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ஆர்என் ரவி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு மத்திய நிர்லமா சீதாராமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக கூறியுள்ளதாகவும், திமுக கடந்த 70 ஆண்டுகளாக இதனை செய்து வருகிறது எனவும் அவர் சாடினார்.
அதோடு திமுக உள்பட ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்துக்களுக்கும், சனாதன தர்மத்துக்கு எதிரானவர்கள் என அவர் கொதித்தார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் (உதயநிதி ஸ்டாலின்) சனாதன தர்மத்துக்கு எதிரான போராட்டம் அல்ல மாறாக சனாதன தர்மத்தை ஒழிப்பதற்கான போராட்டம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளது. சனாதனத்துக்கு எதிரான போக்கு என்பது திமுகவின் கொள்கையாகவே இருக்கிறது. இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பேச்சின் அர்த்தத்தை இந்தியாவில் உள்ள பிற மாநில மக்களால் சரியா புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு மொழி ஒரு தடையாக இருக்கிறது. இது காலம் காலமாக தொடர்கிறது. ஆனால் தற்போது சமூக வலைதளங்கள் உள்ளன. இதனால் தற்போது மொழிப்பெயர்ப்பாளர்கள் கூட தேவையில்லாத சூழல் உள்ளது. மேலும் இத்தகைய செயலில் திமுக கடந்த 70 ஆண்டுகளாக செய்து கொண்டு கபடநாடகம் நடத்தி வருகிறது.

உதயநிதி ஸ்டாலினின் தற்போதைய கருத்து என்பது அரசியலமைப்பு சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளது. அதோடு அவரது பேச்சு என்பது பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறி உள்ளது. இது பற்றி அறிந்திருந்தும் கூட அவர் வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். திமுக உள்பட ‛இந்தியா' கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் இந்து மதத்துக்கும், சனாதன தர்மத்துக்கும் எதிரானவர்கள். காங்கிரஸ் கட்சியும் நாட்டை பிரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.'' என சாடியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி என்பது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. அதோடு திமுக தலைவர்களின் (உதயநிதி, ஆ ராசா) ஆகியோரின் பேச்சில் உடன்பாடில்லை என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவுடன் சேர்த்து காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்துக்கது.












Click it and Unblock the Notifications