ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்... அமைச்சர்கள் எண்ணிக்கையை 53-லிருந்து 81-ஆக உயர்த்த முடிவு..!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 2-வது முறையாக வெற்றிபெற்றது. அப்போது 53 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மத்தியில் பாஜக அரசு 2-வது முறையாக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடந்துள்ள நிலையில் இதுவரை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அமைச்சரவையில் 81 பேர் வரை இடம்பெற முடியும் என்பதால் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் செயல்படாத அமைச்சர்களிடம் இருந்து பதவிகள் பறிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அமைச்சரவை விரிவாக்கத்தின் போது புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வரும் சூழலில் எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.
இதனிடையே இந்திராகாந்தியின் பேரனும் சஞ்சீவ் காந்தியின் மகனுமான வருண் காந்திக்கு ஒன்றிய அமைச்சர் பதவி தரப்படும் என டெல்லி வட்டாரங்கள் உறுதிபடக் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications