மோடிக்கு பதில் பிரதமர் பதவியில் நிதின் கட்கரி? வந்து விழுந்த கேள்வி.. அவரே சொன்ன பதிலை கேளுங்க
டெல்லி: லோக்சபா தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவியை வழங்க முன்வந்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் கூறியது சர்ச்சையானது. இதற்கிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இப்போது இது தொடர்பாக சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். மேலும், மோடியின் இடத்திற்கு நீங்கள் வருவீர்களா என்ற கேள்விக்கும் அவர் முக்கிய பதிலை அளித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் இப்போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி. இப்போது கேபினட்டில் உள்ள மூத்த அமைச்சர்களில் ஒருவராக நிதின் கட்கரி பார்க்கப்படுகிறார்.

நிதின் கட்கரி: இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவி வழங்குவதாகச் சொல்லி தன்னை அணுகியதாகக் கூறியிருந்தார். அது அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி பிரதமர் பதவி தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் பிரபல ஆங்கில ஊடகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி, "எனக்கு எதிர்க்கட்சிகள் இணைந்து பிரதமர் பதவியை வழங்கிய போது, நான் அவரிடம் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டேன்.. நீங்கள் ஏன் நான் பிரதமராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்.. நான் ஏன் பிரதமருடன் (மோடி) இருக்கக்கூடாது என்று கேட்டேன். அதாவது பிரதமர் ஆவது எனது நோக்கம் இல்லை.
மறுத்துவிட்டேன்: எதிர்க்கட்சிகள் தேர்தல் முடிந்த பிறகு மட்டுமே என்னை அணுகவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன்பே கூட என்னை அணுகி பிரதமர் பதவியை வழங்குவதாகச் சொன்னார்கள். அப்போதே நான் வேண்டாம் எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்" என்று அவர் சொன்னார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் போய் கேளுங்கள்: தீவிர அரசியலில் இருந்து எப்போது ஓய்வு பெற விரும்புகிறார்கள்.. பிரதமர் மோடிக்கு மாற்றாக இருப்பீர்களா என்ற கேள்விக்கு நிதின் கட்கரி, "நான் எந்த ரேஸிலும் இல்லை. யாரிடமும் எதற்காகவும் சென்று பதவி கேட்கவில்லை. நான் எனது பணியைச் செய்து வருகிறேன். நான் இருக்கும் இடத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மற்ற விஷயங்களைப் பற்றி பிரதமர் மோடியிடமோ அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பிடமோ சென்று கேளுங்கள்" என்றார்.
திட்டம் என்ன: பாஜகவில் தனது பங்கு குறித்துப் பேசிய நிதிஷ் கட்கரி, "நான் பாஜகவின் தொண்டர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுப்பினர். இப்போது நான் அமைச்சராக இருக்கிறேன். ஆனால், இந்த பதவியில் இல்லாவிட்டாலும் நான் கவலைப்பட மாட்டேன். என்னைப் பொறுத்தவரை சமூகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கருவியாக அரசியலை நான் எப்போதும் பார்க்கிறேன். எங்கு இருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் நான் சீர்திருத்தம் செய்து கொண்டே இருப்பேன், எதற்கும் கவலைப்பட மாட்டேன்" என்று கூறினார்.
பாஜகவில் மிகவும் செல்வாக்கான தலைவர்களில் ஒருவராகவே நிதின் கட்கரி பார்க்கப்படுகிறார். சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிலும் கூட பாஜகவில் மோடியைத் தவிர்த்து யார் பிரதமராக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, நிதின் கட்கரி மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதின் கட்கரி ராஜ்யசபாவில் இருந்து எம்பி ஆகாமல் நேரடியாக மக்களைச் சந்தித்து வென்றவர். கடந்த 2014இல் நாக்பூர் எம்பியாக தேர்வான இவர். தொடர்ந்து 3 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications