சிறையில் இருந்து வெளியே வந்ததும்.. கெஜ்ரிவால் சொன்ன முதல் வார்த்தை.. உற்சாகமான ஆம் ஆத்மி தொண்டர்கள்
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. இதையடுத்து இரவு 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், திரண்டு இருந்த தொண்டர்களை நோக்கி உற்சாகமாக கை அசைத்தார். தொடர்ந்து பேசிய அவர், 'எனக்கு அனுமனின் ஆசி எப்போதும் உள்ளது. நாம் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட வேண்டும்' என்றார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மாதம் 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்தது. தேர்தல் காலம் என்பதால் பிரசாரம் செய்ய ஏதுவாக ஜூன் 01 ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்தது.

கிட்டத்தட்ட 2 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் , உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் அளித்த நிலையில் இன்று இரவு 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்தார். கெஜ்ரிவாலை வரவேற்க ஆம் ஆத்மி தொண்டர்கள் சிறைக்கு வெளியே திரண்டு இருந்தனர்.
அவர்களை பார்த்து உற்சாகத்துடன் கை அசைத்து சென்ற கெஜ்ரிவால், பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது கெஜ்ரிவால் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நான் தற்போது உங்கள் முன்னால் வந்துள்ளேன். நாளை காலை டெல்லியில் உள்ள ஹனுமன் கோயிலில் நான் வழிபாடு செய்ய உள்ளேன்.
எனக்கு எப்போதும் அனுமனின் ஆசி உள்ளது. நாம் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராட வேண்டும். இதுவே எனது கோரிக்கை.. சர்வாதிகாரத்திற்கு எதிராக நாம் அனைவரும் போராட வேண்டும்" என்றார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அவரது தொண்டர்கள் வழிநெடுக வரவேற்பு தெரிவித்தனர். தொண்டர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications