காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்?.. சோனியாவா அல்லது ராகுலா? என்ன நடக்கும்?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது குறித்த விவகாரத்தில் சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக தொடர வாய்ப்புள்ளதாகவும் இல்லாவிட்டால் ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவியை ஏற்க நிர்பந்திக்கக் கூடும் என்றும் பரவலாக கருத்துகள் எழுகின்றன.
Recommended Video
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி அப்பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கட்சிக்கு நிரந்தரத் தலைவர் வேண்டும் என மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரியங்காவும் ராகுலும் நேரு குடும்பத்தைச் சேராதவரை தலைவராக நியமிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால் சில தலைவர்களோ ராகுலே கட்சியின் தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள். இதனால் கட்சியில் தலைவர் யார் என்பதில் முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. அதில் தலைவர் யார் என்பது தேர்வு செய்யப்படுவர் என்பதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் 4 முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
முதல், சோனியா காந்தியே தலைவராக தொடர்வார். சோனியா தலைவராக தொடர்வதையே பெரும்பாலான மூத்த நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. அடுத்தது, ஒரு வேளை சோனியா காந்தி இதற்கு மறுத்துவிட்டால் என்ன செய்வது என்பதுதான். அந்த சமயத்தில் ராகுல்காந்தி அப்பொறுப்பில் தொடர வேண்டும் என மற்ற நிர்வாகிகள் கோரிக்கை விடுப்பர்.
ஒரு வேளை கடந்த முறை மூத்த தலைவர்கள் பேசியும் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்து அப்பதவியில் அமர்வதில்லை என்ற பிடிவாதத்தில் இருந்த ராகுல் தற்போதும் அதே நிலையில் இருக்கலாம் என சில தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் தலைவர் பதவிக்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழும் என்கிறார்கள்.
அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நடத்தும் குழுக்கள் இருக்கின்றன. ஹரியானா மற்றும் சில தொலைதூர மாநிலங்களில் மட்டுமே மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் நடைமுறை மட்டுமே இருக்கிறது. மொத்தமாக 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை தலைவரை தேர்வு செய்வர். இந்த நடைமுறைகள் முடிவடைய எப்படியும் இரு மாதங்களாகும்.
கடந்த 2019ஆம் ஆண்டு சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போதும் 6 மாதங்களுக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அது முடியாமல் போயிற்று. எனவே புதிய தலைவரை இன்னும் 3 மாதம் முதல் 6 மாதத்தில் தேர்வு செய்யலாம் என காரிய கமிட்டி முடிவு செய்யும் என தெரிகிறது. மேலும் அதுவரை சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக தொடர வேண்டும் என கட்சித் தலைவர்கள் கேட்கக் கூடும்.
காங்கிரஸ் கட்சிக்குள் எழும் சலசலப்பு... தலைமை பொறுப்பை ஏற்கத்தயங்கும் ராகுல்காந்தி
ஒருவேளை தனது உடல்நிலையை காரணம் காட்டி இந்த குறுகிய காலத்திற்கு கூட சோனியா காந்தி இடைக்காலத் தலைவராக செயல்பட மாட்டேன் என்றால் என்ன செய்யலாம் என்பது குறித்தும் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே அந்தோணி அல்லது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரில் ஒருவர் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படலாம். இந்த வாய்ப்பு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சுஷில் குமார் ஷிண்டேவுக்கும் உள்ளது. எனவே காங்கிரஸ் காரிய கமிட்டியில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த 4 சாத்தியக்கூறுகளை ஒத்தே இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.