அல்வா முதல் மாம்பழ ஜூஸ் வரை! சுக்லாவின் 20 நாள் மெனுவில் இந்திய உணவுகள் பெரிசா இல்லையே! ஏன் தெரியுமா
டெல்லி: சுமார் 20 நாட்கள் விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா நேற்று பத்திரமாகப் பூமி திரும்பினார். அவரும் மற்ற விண்வெளி வீரர்களும் வந்த டிராகன் விண்கலம் கலிபோர்னியா கடலில் பத்திரமாகத் தரையிறங்கியது. இந்த விண்வெளிப் பயணத்தில் கடந்த 20 நாட்கள் சுக்லா என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா கடந்த ஜூன் 25ம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டார். சர்வதேச விண்வெளி மையத்தில் அவர் கடந்த 20 நாட்கள் தங்கியிருந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வுகள் அனைத்தும் முடிந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பினார். நேற்றைய தினம் மாலை 3 மணிக்கு அவரது விண்கலம் பூமியை வந்தடைந்தது.

பத்திரமாகப் பூமி திரும்பினார்
அவரும் மற்ற விண்வெளி வீரர்களும் வந்த டிராகன் விண்கலம் கலிபோர்னியா கடலில் பத்திரமாகத் தரையிறங்கியது. சுக்லாவின் இந்த விண்வெளிப் பயணம் இஸ்ரோவின் அடுத்த மிஷனான ககன்யான் திட்டத்திற்கு மிகப் பெரியளவில் உதவும். சுக்லா இப்போது ஒரு வாரம் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். அங்கு எல்லா பிராசஸும் முடிந்து சுக்லா இந்தியா திரும்பச் சில வாரங்களாவது ஆகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுகள் என்ன
கடந்த 20 நாட்கள் விண்வெளியில் அவர் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். பொதுவாக நாம் இங்கு பூமியில் சாப்பிடும் எல்லா உணவுகளையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இருக்காது. மேலும், விண்வெளி நிலையத்தில் குறைந்தபட்ச இடம் மட்டுமே இருக்கும். மேலும், உணவை அங்குச் சமைப்பது எல்லாம் முடியாத காரியம். இதனால் பூமியில் சாப்பிடும் எல்லா உணவுகளையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. விண்வெளியில் சாப்பிடும் உணவுகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
அதிலும் முதலில் விண்வெளிப் பயணங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது உணவுகள் மிக மோசமாகவே இருந்ததாக அப்போதைய விண்வெளி வீரர்கள் கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு தொடர்ச்சியாக நடந்த ஆய்வுகளுக்கு பிறகே உணவு ஓரளவுக்கு மேம்பட்டு இருக்கிறது. ஆனாலும், இப்போதும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. எல்லாமே பேக் செய்யப்பட்ட உணவுகளாகவே இருக்கும். இந்த உணவுகளையே சுபன்ஷு சுக்லா உட்பட அனைத்து விண்வெளி வீரர்களும் எடுத்துக் கொண்டனர்.
ஹல்வா முதல் ஜூஸ் வரை
மேலும், சுபன்ஷு சுக்லா தனக்குப் பிடித்த சில உணவுகளையும் விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். குறிப்பாக அவருக்கு மாம்பழ ஜூஸ் (mango nectar), கேரட் அல்வா (கஜர் கா அல்வா), மற்றும் மூங் தால் அல்வா ஆகியவற்றை எடுத்துச் சென்றிருக்கிறார். இதை அவரே தனது பேட்டி ஒன்றிலும் பகிர்ந்திருந்தார். விண்வெளியில் இருக்கும்போது பல வகையான அழுத்தங்கள் ஏற்படும். எனவே, விண்வெளி வீரர் பிடித்த உணவைச் சாப்பிடுவது முக்கியம். இதன் காரணமாகவே விருப்பமான சில உணவுகளுக்கும் அனுமதி தரப்படுகிறது.
சுக்லா விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் முன்பு அவருக்குப் பிரியா விடை கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போதும் கூட அவர் கேரட் அல்வாவை தான் மற்ற விண்வெளி வீரர்களுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய உணவுகள் ரொம்ப குறைவு
மேலும், ஏன் மற்ற இந்திய உணவுகளை எடுத்துச் செல்லவில்லை என்ற இன்னொரு சந்தேகமும் நமக்கு வரும்.. அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது விண்வெளி நிலையத்தில் அதீத வாசனை இருக்கும் உணவுகளுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சுக்லாவால் அதிக இந்திய உணவுகளை எடுத்துச் செல்ல முடியவில்லை. இதை அவரது சகோதரி சுசி சுக்லாவே உறுதி செய்திருக்கிறார்.
இது மட்டுமின்றி கூல் டிரிங்க்ஸ், மதுபானத்திற்கும் விண்வெளி மையத்தில் அனுமதி இல்லை. மேலும், ஈஸியாக துகளாக உடைந்து போகும் பிஸ்கட், பிரட் க்ரம்ஸுக்கும் அனுமதி இல்லை. அதேபோல சீக்கிரம் கெட்டுப்போகும் உணவுகளாகக் கருதப்படும் பால் உள்ளிட்டவற்றுக்கும் அங்கு அனுமதி இல்லை எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications