"சட்டத்தின் மீதான நம்பிக்கையை பெற.." மணிப்பூர் வன்முறை.. உச்ச நீதிமன்றம் சொன்ன இதை கவனிச்சீங்களா
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் நடந்த மோசமான வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இது குறித்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை உச்சத்தில் இருக்கிறது. அங்கு இரு தரப்பு மக்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மணிப்பூர் முழுக்க பதற்றமான சூழல் காணப்பட்டது.

இந்த 3 மாதங்களில் மணிப்பூர் மாநிலத்தில் நாம் கற்பனை கூடச் செய்ய முடியாத பல மோசமான சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக மோசமான வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின.
மணிப்பூர் வன்முறை: இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மணிப்பூர் போலீசார் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிவித்த உயர் நீதிமன்றம், அங்கு நடந்த அனைத்து குற்றங்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், மணிப்பூர் மாநில டிஜிபியை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மணிப்பூர் டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மணிப்பூர் விவகாரத்தில் மூன்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்து உத்தரவிட்டுள்ளது. ஒரு பக்கம் விசாரணை நடக்கும் நிலையில், மறுபுறம் இன வன்முறை தொடர்பான வழக்குகளில் மறுவாழ்வு உள்ளிட்ட சிக்கல்களை இந்த குழு ஆராயும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அதிகாரம் விரிவானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கையை பெற: சட்டத்தின் ஆட்சி மீதான நம்பிக்கையை ஏற்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த குழுவில் நீதிபதி கீதா மிட்டல் (காஷ்மீர் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி), நீதிபதி ஷாலினி ஜோஷி (மும்பை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி), நீதிபதி ஆஷா மேனன் (டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி) ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிபிஐ விசாரணையை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தத்தாத்ரே பட்சல்கிகர் கண்காணிக்க உள்ளார். பல்வேறு மாநிலங்களில் இருந்து சிபிஐக்கு வரவழைக்கப்பட்ட துணை எஸ்பி அந்தஸ்தில் இருக்கும் ஐந்து அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்வார்கள் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தரவுகள்: இது போக சிபிஐக்கு மாற்றப்படாத வழக்குகளை 42 சிறப்புக் குழுக்கள் கண்காணிக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்த குழுக்களின் விசாரணையை வெளிமாநிலத்தைச் சேர்ந்த டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு அதிகாரியும் ஆறு சிறப்புக் குழுக்களை கண்காணித்து விசாரணை முறையாகச் செல்கிறதா என்பதை உறுதி செய்வார்கள் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் மக்களின் நிவாரணங்கள் தொடர்பான வழக்கு தவிர நீதிமன்ற கண்காணிப்பு உட்பட 10 மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. அதில் தான் நீதிமன்றம் இன்று பல முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. இது மணிப்பூரில் பாதிக்கப்படும் பழங்குடியின மக்களிடையே நம்பிக்கையை பெறவும் அங்கு அமைதி திரும்பவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications