அடுத்தடுத்து திவாலாகும் அமெரிக்க வங்கிகள்.. இந்திய வங்கிகளின் நிலை என்ன? பிரதமர் மோடி பரபர பேச்சு
அமெரிக்க வங்கிகள் அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
டெல்லி: அமெரிக்காவில் சில வாரங்களில் மட்டும் இப்போது மூன்று வங்கிகள் திவாலாகியுள்ளது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியாவில் இருக்கும் வங்கிகள் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கொரோனா காலத்திற்குப் பிறகு விலைவாசி உலகெங்கும் உச்சம் தொட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என உலகின் பல முன்னணி நாடுகளிலும் விலைவாசி உயர்ந்தே வருகிறது.
அமெரிக்காவில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வட்டி விகிதத்தைக் கடந்த ஓராண்டில் கணிசமாக உயர்த்தியுள்ளது.

சிலிகான் வேலி பேங்க்
இதனால் மற்ற வங்கிகள் பிரச்சினையில் சிக்கியுள்ளது. பல வங்கிகளின் நிதிநிலை மோசமாகியுள்ளது. அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதியைக் கையாளும் எஸ்விபி எனப்படும் அதாவது சிலிகான் வேலி பேங்க்.. அங்கு சிலிகான் பள்ளத்தாக்கில் தான் பெரும்பாலான ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்படும். அந்த ஸ்டார்ட்அப்களின் நிதியை இந்த சிலிகான் வேலி பேங்க் தான் கையாளும். இதில் பணம் வைத்திருந்த பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றதால் எஸ்விபி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

திவால்
புதிய டெபாசிட்களை வங்கியால் பெற முடியாமல் போனதால், புது பங்கு பங்குகளை வெளியிட்டும், பத்திரங்களை நஷ்டத்திற்கும் விற்றும் நிலைமை சமாளிக்க முயன்றது. இதனால் வங்கியின் பங்குகளின் மதிப்பு 60% வரை சரிந்தன. கலிபோர்னியாவில் 1983-ல் நிறுவப்பட்ட சிலிக்கான் வேலி பேங்க், அமெரிக்காவின் 16ஆவது மிகப் பெரிய வங்கியாகும். இந்த எஸ்விபி முடங்கியது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. வங்கியில் பணத்தை டெபாசிட் செய்துள்ளவர்களுக்குப் பணம் திரும்பி அளிக்கப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துவிட்டது.

மொத்தம் மூன்று வங்கிகள்
2008 மந்தநிலைக்குப் பிறகு வங்கி திவாலாவது இதுவே முதல்முறையாகும்.. இது ஒரு பக்கம் இருக்க எஸ்விபி வங்கியைப் போல மேலும் சில வங்கிகள் சிக்கலை எதிர்கொண்டு இருக்கிறது. அங்குள்ள சில்வர்கேட் வங்கி, சிக்னேச்சர் வங்கி இதேபோல நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்த மூன்று வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில், வரும் காலத்தில் அமெரிக்காவில் மேலும் சில வங்கிகள் திவாலாகும் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த நிலை உலகின் மற்ற நாடுகளிலும் எதிரொலிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்திய வங்கிகள்
அமெரிக்க வங்கிகள் திவாலாகி வரும் நிலையில், இந்திய வங்கிகள் குறித்தும் பலரும் அஞ்சுகின்றனர். எங்கு அமெரிக்க வங்கிகளின் நிலை இந்திய வங்கிகளுக்கு ஏற்படுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இருப்பினும், இந்தியாவில் அவ்வளவு சீக்கிரம் எந்தவொரு வங்கியும் திவாலாகாது. கடந்த காலங்களில் இக்கட்டான சூழலை எதிர்கொண்ட வங்கிகளையும் கூட அரசு தலையிட்டுக் காப்பாற்றியுள்ளது. அதையும் தாண்டி வங்கி திவாலானாலும் கூட காப்பீடு மூலம் 5 லட்ச ரூபாய் வரை திரும்பப் பெற முடியும். இதற்கிடையே இந்திய வங்கிகள் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடியே பேசியுள்ளார்.

பிரதமர் மோடி
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "இன்று இந்தியாவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்படி முடிவுகளை எடுக்கிறது என்பதை உலகம் கவனிக்கிறது. ஜனநாயகத்தை முறையாகப் பின்பற்ற முடியும் என்பதை இந்தியா உலகுக்குக் காட்டியுள்ளது. சர்வதேச சோலார் கூட்டணி, நிதி ஆயோக், என்சிஎல்டி, GST கவுன்சில் எனப் பல ஜனநாயக அமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது. இந்தியாவில் மக்களின் ஜனநாயகப் பங்கேற்பு மேலும் மேலும் அதிகரித்து வருவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. கொரோனா காலத்திலும் கூட நாட்டில் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதுவே நமது அமைப்புகளின் பலம்" என்றார்.

பேச்சு
தொடர்ந்து வங்கிகள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இப்போது உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. மேலும் வங்கி அமைப்பும் வலுவாக இருக்கிறது. இதுவே நமது அமைப்புகளின் பலம். நமது ஜனநாயக அமைப்புகளின் வெற்றியைக் கண்டு பொறாமை கொள்வோர் அதைத் தாக்கும் கருத்துகளைக் கூறுகின்றனர். இருந்தாலும், இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இந்தியா தனது இலக்கை முழு வேகத்தில் சென்று தனது இலக்குகளை அடையும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications