ராகுல் காந்திக்கு என்ன ஆகும்.. எம்பி பதவியை இழக்கும் ஆபத்து? இருக்கும் ஒரே ஆப்ஷன் இது மட்டும் தான்
டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்திக்கு 2019இல் அவதூறு பேச்சு வழக்கில் இப்போது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது எம்பி பதவிக்கு என்ன ஆகும். அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2019இல் ராகுல் காந்தி தலைமையில் தான் காங்கிரஸ் மக்களவை தேர்தலை எதிர்கொண்டது. அப்போது ராகுல் காந்தி தான் அகில இந்தியா காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ராகுல் காந்தி நாடு முழுக்க பிரசாரம் செய்தார். அதில் காங்கிரஸ் தோல்வியடைந்தது ஒரு பக்கம் இருந்தாலும் அதேநேரத்தில் அப்போது பிரசார சமயத்தில் பல்வேறு சர்ச்சைகளும் இருந்தன.

சர்ச்சை பேச்சு
அப்படித்தான் மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். கோலாரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், மோடி என்ற பெயர் கொண்ட அனைவரும் ஒரே போல இருப்பதாகச் சாடினார்.. அதன் பிறகு சர்ச்சைக்குரிய வார்த்தையையும் அவர் குறிப்பிட்டார். இது அப்போதே சர்ச்சையான நிலையில், மோடி என்ற பெயர் வைத்துள்ளவர்களை அவர் அவமதித்து விட்டதாகப் புகார்கள் எழுந்தன.

2 ஆண்டு ஜெயில்
மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாக ராகுல் காந்தி குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தியைக் குற்றவாளியை அறிவித்த நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கினார். இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழ் காந்தி குற்றவாளி என்று மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா தீர்ப்பளித்தார்.

எம்பி பதவி என்னவாகும்
அதேநேரம் ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீனும் வழங்கியது. அவர் இப்போது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வயநாடு எம்பி பதவி என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து லோக்சபா சபாநாயகர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று யாராவது முதலில் சபாநாயகர் அலுவலகத்திற்குப் புகார் அளிக்கட்டும். அதன் பிறகு சட்ட வல்லுநர்களைக் கொண்டு, ஆய்வு செய்து முடிவெடுக்க உள்ளோம்'' என்றார்.

சட்டம் சொல்வது என்ன
ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்ட எம்பி ஒருவரைத் தகுதி நீக்கம் செய்வது என்பது இரண்டு நிகழ்வுகளில் நிகழலாம். 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(1) கீழ் அவர் தண்டிக்கப்பட்ட குற்றம் பட்டியலிடப்பட்டிருந்தால் அவரை தகுதிநீக்கம் செய்யலாம். இரு சமூகத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்துதல், லஞ்சம், தேவையற்ற செல்வாக்கு போன்ற சில குறிப்பிட்ட குற்றங்களும் இதில் அடங்கும். அதேநேரம் ராகுல் காந்தி இப்போது தண்டிக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு எல்லாம் இதில் வராது.

இரண்டு ஆண்டுகள் சிறை
அடுத்துத் தண்டிக்கப்பட்ட ஒருவர் வேறு ஏதேனும் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டாலும், இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும் இது பொருந்தும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3) கீழ் ஒரு எம்பி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவரும் தண்டிக்கப்படலாம். இதில் சட்டப்பிரிவு 8(4) என்ன சொல்கிறது என்றால் தகுதி நீக்கம் என்பது தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்கள் கடந்த பிறகு மட்டுமே நடைமுறைக்கு வரும்.. அதற்குள் ராகுல் காந்தி உயர்நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

வழி என்ன
அதேநேரம் தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் மட்டுமே தகுதிநீக்கத்தை நிறுத்தி வைக்க முடியும் என்று சொல்ல முடியாது. 2013 ஆம் ஆண்டு 'லில்லி தாமஸ் vs யூனியன் ஆஃப் இந்தியா' வழக்கில் உச்ச நீதிமன்றம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(4) ஐ அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறி நீக்கியது. அதாவது தகுதி நீக்கத்தை நிறுத்தி வைக்க மேல்முறையீட்டைத் தாக்கல் செய்வது மட்டும் போதாது..

தடை உத்தரவு தேவை
விசாரணை நீதிமன்றத்தின் தண்டனைக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட தடை உத்தரவைப் பெற வேண்டும். அப்படி தடை உத்தரவைப் பெற்றால் மட்டுமே எம்பி தகுதி நீக்கம் செய்வதை நிறுத்தி வைக்க முடியும். இப்போது ராகுல் காந்தியிடம் இருக்கும் ஒரே ஆப்ஷன் இது மட்டும் தான். காங்கிரஸ் தலைவர்கள் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இதில் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவில் எடுக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications