"பெருசா வரப்போகுது இந்தியா".. அதானிக்கு பிறகு யார்? அதிர வைக்கப்போகும் ஹிண்டன்பெர்க் அறிக்கை
டெல்லி: தொழிலதிபர் அதானி குறித்து கடந்த ஆண்டு ஹிண்டன்ர்பெர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் பிரளயத்தை உருவாக்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியதோடு, அதானி குழுமத்துக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அதானிக்கு பிறகு இந்தியாவின் அடுத்த டார்க்கெட் குறித்த முக்கிய தகவலை ஹிண்டன்பெர்க் வெளியிட்டுள்ளது.
ஹிண்டன்பெர்க்.. கடந்த ஆண்டு இந்தியாவை அதிரவைத்த பெயர். ஹிண்டன்பெர்க் என்பது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் முதலீடு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனாகும். இதன் முழுப்பெயர் ஹிண்டன்பெர்க் ரீசர்ஜ் எல்எல்சி (Hindenburg Research LLC).

இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹிண்டன்பெர்க் வெளியிட்ட ஆய்வறிக்கை என்பது இந்திய அரசியலில் பெரும் பூகம்பத்தை கிளப்பியது. அந்த அறிக்கை என்பது நம்நாட்டில் பெரும் கோடீஸ்வரராக இருந்த அதானியின் நிறுவனத்தை சார்ந்து இருந்தது. அதாவது அவரது நிறுவனம் பங்கு சந்தையில் மோசடி செய்து லாபம் ஈட்டியதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதானி குடும்பத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் பங்கு மதிப்புகளை உயர்த்தி காட்டி அதானி நிறுவனங்கள் அதி கடன் பெற்று பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு வெளியானதில் இருந்தே தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை வெளியான நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பெரும் பணக்காரரான அதானி குழும பங்குகளின் விலை குறைய தொடங்கியது. 86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன. அவருக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் அதானி குழுமத்தின் பங்கு சந்தை முறைகேடு பற்றி விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். நாடாளுமன்றத்தை முடக்கினர். மேலும் தேர்தல் பிரசாரங்களில் மேடைக்கு மேடை ராகல் காந்தி அதானிக்கு ஆதரவாக பிரமதர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுவதாக தெரிவித்தார். இது பாஜகவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது.
மேலும் அதானி மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் செபி விசாரணை நடத்தினால் போதும் என கூறியது. உண்மையில் ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை என்பது அதானி குழுமத்துக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியது. அதன்பிறகு தற்போது படிப்படியாக அதானி குழும பங்குகள் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது ஹிண்டன்பெர்க் சார்பில் இந்தியா நோக்கி புதிய குண்டு வீசப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹிண்டன்பெர்க் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "Something big soon India" என தெரிவித்துள்ளது. அதாவது விரைவில் இந்தியா பற்றிய பெரிய விஷயம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை யாரை பற்றியதாக இருக்கும்? எந்த தொழில் அதிபர் அல்லது எந்த பங்கு சந்தை முதலீடு தொடர்பான விபரமாக இருக்கும்? என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.












Click it and Unblock the Notifications